அமெரிக்காவுக்கு வரியை குறைக்கும் இந்தியா.. மிரட்டியே காரியம் சாதிக்கும் டிரம்ப்.. பெரிய ட்விஸ்ட்
வாஷிங்டன்: ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளுக்கு பதிலுக்கு பதில் அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான நிலையில் தான் அமெரிக்காவின் பொருட்களுக்கு வரியை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் வைத்து பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் பற்றி விவாதித்தனர். அதன்பிறகு கூட்டாக இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்காவுக்கு அதிக வரிகளை இந்தியா விதிக்கிறது. அதேபோல் அமெரிக்காவும் வரி விதிப்பு செய்யும் என்று கூறினார்.

தொடர்ந்து அவ்வப்போது இந்தியா அதிகமான வரிகளை விதிக்கிறது என்று டிரம்ப் கூறி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் டிரம்ப் பேசினார். அப்போது தெற்காசிய வர்த்தக பார்ட்னர்களான இந்தியா உள்பட பிற நாடுகளுக்கு பதிலுக்கு பதில் வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார்.
விரிவாக சொல்ல வேண்டும் என்றால், ‛‛இந்தியா நமக்கு 100 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை வசூலிக்கிறது. சீனாவின் சராசரி வரி என்பது நம் தயாரிப்புகளுக்கு நாம் வசூலிப்பதை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது. தென்கொரியாவின் சராசரி வரி என்பது நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. நண்பர்கள் மற்றும் எதிரிகள் என்று அனைவரும் இதனை செய்கின்றனர். இது அமெரிக்காவுக்கு நியாயமானதாக இல்லை. ஏப்ரல் 2ம் தேதி முதல் பரஸ்பர வரிகள் அமலுக்கு வருகின்றன.
மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதிக்கிறார்களோ, அதேபோல் நாமும் பதிலுக்கு வரி விதிப்போம். ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினம். இதனால் அந்த அறிவிப்பை ஏப்ரல் 2ல் செயல்படுத்த உள்ளேன்'' என்று கூறினார். இதன்மூலம் இந்தியா உள்பட தெற்காசிய நாடுகள் மீது டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு அபாயம்ஏற்பட்டது.
இந்நிலையில் தான் நேற்று டொனால்ட் ட்ரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛அமெரிக்காவுக்கு அதிக வரிகளை இந்தியா விதிக்கிறது. இப்போது வரியை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது'' என்று கூறியுள்ளார். அதாவது நம் நாட்டில் உள்ள பல நிறுவனங்களின் அமெரிக்காவுடன் ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், நகை உள்பட பல்வேறு பொருட்கள் தொடர்பாக வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளன. இப்படியான சூழலில் அமெரிக்காவின் வரி மிரட்டல் என்பது பிசினஸை பாதிக்கும். இதனை மத்திய அரசு உணர்ந்துள்ளது. இப்படியான சூழலில் தான் அமெரிக்காவின் பொருட்களுக்கு வரி குறைப்பது தொடர்பாக பரிசீலனையில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக அமெரிக்கா சார்பில் அந்த நாட்டின் பொருட்கள் மீதான வரியை குறைக்க இந்தியாவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. விவசாய விளை பொருட்கள் தவிர மற்றவற்றின் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா டிமாண்ட் வைத்தது. இதனை ஏற்கும்பட்சத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவில் வர்த்தக பாதுகாப்பு அளிக்கப்படும். இல்லாவிட்டால் எந்த சலுகைகளும் அளிக்கப்படாது என்று கூறப்பட்டது. இதனை நம் நாடும் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு அமெரிக்காவின் வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லுட்நிக் கூறுகையில், ‛‛உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இதனை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சிறப்பு உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். மோட்டார் சைக்கிள்கள், போர்பன் உள்பட பிற பொருட்களின் மீதான வரி குறைப்பை கொண்ட வந்தால் உறவு என்றென்றும் நீடிக்கும். இதனால் இந்தியா - அமெரிக்கா ஒன்றாக இணைந்து ஒருமித்த கருத்தில் சரியான அணுகுமுறையை கையில் எடுப்பதே சிறந்ததாகும்'' என்றார். இப்படியான சூழலில் தான் அமெரிக்காவின் பொருட்களுக்கு வரியை குறைப்பது தொடர்பாக இந்தியா ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications