இந்தியா யானைங்க.. கனடா வெறும் எறும்புங்க! போட்டுத் தாக்கிய அமெரிக்க பென்டகன் முன்னாள் அதிகாரி
வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ள நிலையில், இந்தியாவை யானை என்றும், கனடாவை எறும்பு எனவும் விமர்சித்து உள்ளார் பென்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்து உள்ளார்.
காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா மீது முன்வைத்த குற்றச்சாட்டு காரணமாக இரு நாடுகள் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளில் நட்பு நாடுகளின் நிலைபாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் நிலைபாட்டை பலர் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி, மைக்கேல் ரூபின் இந்தியா - கனடா மோதல் தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகளால் கனடாவுக்கே இந்தியாவை விட அதிக ஆபத்துகள் ஏற்படும்.
அமெரிக்காவை பொறுத்தவரை கனடாவா? இந்தியாவா? என்று கேட்டால் இந்தியாவையே அமெரிக்கா தேர்வு செய்யும். கனடாவை காட்டிலும் இந்தியாவே அமெரிக்காவுக்கு பல்வேறு விவகாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தற்போதைய நிலையில் கனடா இந்தியாவுக்கு எதிராக செயல்படுவது எறும்பு ஒன்று யானைக்கு எதிராக போருக்கு செல்வதை போன்றதாகும்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இருக்கும் ஆதரவு குறைவாகவே இருந்து வருகிறது. அந்நாட்டின் பிரதமர் பதவியைவிட்டு ஜஸ்டின் ட்ரூடோ விலகிய பிறகே, அமெரிக்கா கனடா உடனான நட்புறவை மீண்டும் கட்டி அமைக்கும். மிகப்பெரிய தவறை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரோடோ செய்து இருக்கிறார்.
பின்வாங்கவே முடியாத அளவுக்கு அவரது குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் இந்தியாவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது. அரசுக்கு எதிராக ஏதோ அங்கு உள்ளது. ஒரு பயங்கரவாதிக்கு ஏன் அடைக்கலம் கொடுத்தார்கள் என்பதை கனடா அரசாங்கம் விளக்க வேண்டும்." என்றார்.
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான காலிஸ்தான் டைகர் போர்சின் தலைவரும் கனடா நாட்டை சேர்ந்தவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட நிஜ்ஜார் இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளார்.
இவரது மரணம் தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டுகளே தற்போது பூதாகரமாக வெடித்து உள்ளது. கனடா அரசு இந்திய தூதரை வெளியேற உத்தரவிட்டதும், அதற்கு பதிலடியாக இந்திய அரசு கனடா தூதரை வெளியேற உத்தரவிட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரு நாடுகள் இடையிலான இந்த மோதல் தொடர்பாக இரு நாடுகளின் நட்பு நாடுகள் அதிகாரப்பூர்வமாக எந்த நிலைபாட்டையும் அறிவிக்கவில்லை. குறிப்பாக அமெரிக்க அரசோ, அதிபர் ஜோ பைடனோ இதுவரை யாருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
சீனா, ரஷியா இடையே மோதல் போக்கை கடைபிடிக்கும் அமெரிக்காவுக்கும் கனடாவை விட இந்தியாவின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே இந்தியாவுக்கு சாதகமாகவே அமெரிக்கா இருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications