மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்?
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை நண்பர் என்று உரிமை கொண்டாடி வருகிறார். ஆனால், அமெரிக்க ஆணையம் ஒன்று, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதில், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' (R&AW) ஆகியவற்றுக்கு மதச் சுதந்திர மீறலில் தொடர்பிருப்பதாகக் கூறி, அவற்றின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் பரிந்துரைத்துள்ளது.

மோடி-டிரம்ப் நட்பு
டிரம்பை நண்பர் என்று மோடி கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், இப்படியான பரிந்துரை அமெரிக்க ஆணையத்திடமிருந்து வெளியாகியிருப்பது, இரு நாட்டு உறவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உலகம் முழுவதம் மத சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதுதான் இந்த ஆணையத்தின் வேலை.
அறிக்கை கொடுக்கும் அமைப்பு: இதில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு கட்சி எம்பிக்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் மத சுதந்திரம் குறித்து ஆய்வு செய்து, அதிபர், வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் நாடாளுமன்றத்திற்கு அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்.
இந்தியா மீது விமர்சனம்: அப்படியான அறிக்கையில்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில், இந்தியா குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு என அறிவிக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
ஆணையத்தின் வலியுறுத்தல்
ஒரு நாட்டின் அரசு, தனது மக்களின் மத சுதந்திரத்தை நசுக்கினாளோ, அல்லது மத ரீதியான வன்முறைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்தாலோ, அந்நாடு 'கவலைக்குரிய நாடு' பட்டியலில் சேர்க்கப்படும். இப்படி சேர்க்கப்பட்டுவிட்டால் அமெரிக்கா, அந்த நாட்டுக்கு எந்த உதவியையும் வழங்காது. மட்டுமல்லாது, அந்நாட்டு அதிகாரிகளுக்கு விசா சேவையும் தடை செய்யப்படும். இப்படியான லிஸ்டில் இந்தியாவை சேர்க்க வேண்டும் என்றுதான் அமெரிக்க ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மதமாற்ற தடுப்பு சட்டம்
இந்தியாவை லிஸ்டில் சேர்த்து, RSS அமைப்பு மற்றும் தனிநபர்களின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் மதச் சுதந்திரம் 2025-2026 காலகட்டத்தில் மோசமடைந்துள்ளதாக இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, அசாம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கொண்டுவரப்பட்ட கடுமையான மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.
ரோஹிங்கியா அகதிகள்
மட்டுமல்லாது, காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்ததாகக் கூறியுள்ளது. சுமார் 40 ரோஹிங்கியா அகதிகள் நடுக்கடலில் விடப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மியான்மர் கரைக்கு நீந்திச் செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டதாக ஒரு அதிர்ச்சியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்க்கும் சட்டத் திருத்த மசோதாவையும் இது விமர்சித்துள்ளது.
UAPA சட்டம்
மிக குறிப்பாக, UAPA சட்டம் தவறாக பயன்படுத்துவதாக விமர்சித்திருக்கிறது. உமர் காலித், ஷர்ஜீல் இமாம் போன்றோர் 5 ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் மத சிறுபான்மையினருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளது. இவை அனைத்தும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் நிலைப்பாடு
இதில் கவனிக்க வேண்டி விஷயம் என்னவெனில், இந்த விவகாரத்தை டிரம்ப் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்பதுதான். ஏனெனில் அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு நல்ல உறவு இருக்கிறது. இந்தியாவால் அமெரிக்காவுக்கு சில காரியங்கள் நடக்க வேண்டி இருக்கிறது. எனவே இந்த பரிந்துரையை ஏற்றால், உறவு பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications