டிரம்பிடம் தப்பிய இந்தியா.. அமெரிக்காவிடம் வசமாக சிக்கிய சீனா! வெடிக்கும் வர்த்தக போர்? வார்னிங்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். மேலும் நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வந்தார். ஆனால் இப்போது டிரம்பின் போக்கஸ் சீனாவை நோக்கி திரும்பி உள்ளது. இதனால் அமெரிக்காவிடம் இருந்து நம் நாடு தப்பிய நிலையில் சீனா வசமாக சிக்கி உள்ளது. அதுமட்டுமின்றி சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி தலா 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீத வரியை விதித்தார். உக்ரைன் போரை தொடர ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி இந்தியா உதவி செய்கிறது என்றார் டிரம்ப்.

ஆனால் உண்மையில் ரஷ்யாவிடம் இருந்து நம் நாட்டை விட சீனா தான் அதிக கச்சா எண்ணெய் வாங்குகிறது. ஆனால் சீனாவை டிரம்ப் கண்டுக்கொள்ளவில்லை. இது விவாதத்தை கிளப்பி வந்தது. இதற்கிடையே தான் நம் நாடும், சீனாவும் கைகோர்த்தது. பிரதமர் மோடி சீனா சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார்.
இந்தியாவை அரவணைக்கும் டிரம்ப்
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அமெரிக்காவின் வரி விதிப்பால் இருநாடுகளும் கைகோர்த்தன. மேலும் சீனாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் பிரதமர் மோடி சந்தித்தார். இது டிரம்புக்கு கோபப்படுத்தியது.
மேலும் சீனாவுடன், இந்தியா சேர்ந்தால் ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கு சரியும் என டிரம்ப் நினைத்தார். இதையடுத்து டிரம்ப் நம் நாட்டை அரவணைக்க தொடங்கினார். அதுமட்டுமின்றி நம் நாட்டையும், பிரதமர் மோடியையும் டிரம்ப் புகழ தொடங்கி உள்ளார்.
டிரம்ப் கருத்தை வரவேற்ற மோடி
சமீபத்தில் டிரம்ப், ‛‛இந்தியா, ரஷ்யாவை இருண்ட சீனா நம்மிடம் இருந்து பிரித்து விட்டது. பிரதமர் மோடி நல்ல பிரதமர். அவருடன் நட்பாக இருக்கிறேன். இந்தியா - அமெரிக்கா இடையே நல்ல உறவு இருக்கிறது. இருநாடுகள் இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’’ என்றார்.
சீனாவுடன் கைகோர்த்தால் பயந்துபோய் மோடியின் பக்கம் சாய்ந்தார் டிரம்ப். அதேபோல் டிரம்பின் கருத்தை மோடியும் வரவேற்றார். இதனால் இருநாடுகள் இடையேயான பதற்றம் கொஞ்சம் குறைந்துள்ளது.
சீனா பக்கம் திரும்பிய டிரம்ப்
இது ஒருபுறம் இருக்க டொனால்ட் டிரம்ப் தற்போது சீனாவை எதிரியாக பார்க்க தொடங்கி உள்ளார். இதுவரை நம் நாட்டை சீறி வந்த டிரம்ப் தற்போது முழு போக்கசையும் சீனா பக்கம் திருப்பி உள்ளார். இதுதொடர்பாக நேட்டோ நாடுகளுக்கு அவர் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். ‛‛ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது.
அதேவேளையில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு 50 முதல் 100 சதவீதம் வரி போட வேண்டும். இதை செய்தால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரலாம். ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க நான் தயாராக இருக்கிறேன்'' என்று அழுத்தம் கொடுத்து வருகிறார்.
சீனாவுக்கு பெரிய சிக்கல்
நேட்டோ அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் , போலந்து, துருக்கி உள்பட 32 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் சீனாவுக்கு வரி போட்டால் அந்த நாடு பெரும் பிரச்சனையை எதிர்கொள்ளும். இதனால் டிரம்ப் நேட்டோ நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். டிரம்பின் இந்த செயலை சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கண்டித்துள்ளார்.
இதுபற்றி அவர், ‛‛போர் என்பது பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. அதேபோல் தடைகள் விதிப்பது பிரச்சனையை இன்னும் சிக்கலாக தான் மாற்றும். அதேபோல் நாங்கள் எந்த போரிலும் பங்கேற்கவில்லை. போர் தொடர்பான சதிகளிலும் ஈடுபடவில்லை'' என்றார். இதனால் இருநாடுகள் இடையே மோதல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக போர் மீண்டும் வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனாவை வில்லனாக்கும் டிரம்ப்
மேலும் டிரம்பின் தற்போதைய மாற்றம் கடந்த ஒரு வாரத்தில் அரங்கேறி உள்ளது. ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி சீனா சென்று வந்த பிறகு டிரம்ப் நம் நாட்டை காட்டமாக விமர்சிப்பதை கைவிட்டார்.
மாறாக சீனாவை விமர்சிக்க தொடங்கினார். அதுமட்டுமின்றி தற்போது சீனாவுக்கு நேட்டோ மற்றும் ஜி 7 நாடுகள் மூலமாக வரி விதிக்க அவர் அழுத்தம் கொடுத்து வருகிறார். இதன்மூலம் டிரம்ப் இந்தியாவை விட்டுவிட்டு சீனாவை வில்லனாக பார்க்க தொடங்கி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications