உக்ரைன் ரஷ்யா போர்: செல்வாக்கை பயன்படுத்துங்க..இந்தியாவுக்கு அமெரிக்கா வைத்த கோரிக்கை..என்ன தெரியுமா
ரஷ்யா உடனான உறவை இந்தியா முறித்துக்கொள்ளும் என்று நாங்கள் நினைக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி இந்த போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுக்க உதவும் என அமெரிக்கா நம்புவதாக அந்த நாட்டின் வெளியுறவுத்துறை இணை செயலாளர் டொனால்டு லு தெரிவித்துள்ளார்.
சோவியத் யூனியன் உடைந்த பிறகு தனிநாடாக உக்ரைன் உருவெடுத்தது. உக்ரைன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருந்த ரஷ்யா, கிரீமியாவை இணைத்தது போல உக்ரைனையும் தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடனே இருந்தது.
இதற்கான தருணத்தை ரஷ்யா எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கு உக்ரைன் ஆர்வம் காட்டியது.

உக்ரைன் ரஷ்யா போர்
இதுதான் சமயம் என்று எண்ணிய ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் அதிரடியாக நுழைந்தது. பெரும் ராணுவ பலம் கொண்ட ரஷ்யா, உக்ரைனை எளிதில் கபளீகரம் பண்ணிவிடும் என்றே பல தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உக்ரைன் போரில் கடும் சவால் அளித்தது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுத உதவி, நிதி உதவியை அளித்ததால் இந்த போர் நெடுந்தொடர் போல நீண்டு வருகிறது.

போரை முடிவுக்கு கொண்டு வர..
உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றினாலும் ரஷ்யாவால் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியவில்லை. ரஷ்ய - உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டை கடந்து விட்டது. இந்த போர் ஒருபக்கம் நீடித்து வருவது சர்வதேச அளவில் உணவு விநியோக சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு பொருள் ஏற்றுமதி தொடங்கி இயற்கை எரிவாயு ஏற்றுமதி வரை பாதிக்கப்பட்டதால் பொருளாதார நெருக்கடிக்கும் வித்திட்டுள்ளது. இதனால், இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா
உக்ரைன் போரை உடனே நிறுத்தக்கோரி ஐநாவில் சிறப்பு தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. எனினும், ரஷ்யாவுக்கு எதிரான இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான இந்தியா போர் விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று ரஷ்யாவிடம் வலியுறுத்தினாலும் அமெரிக்கா எதிர்பார்ப்பது போல அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட மறுத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நம்பிக்கை
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை இணை செயலர் டொனால்டு லூ கூறியதாவது:- "ரஷ்யாவுடனான உறவை இந்தியா முறித்துக்கொள்ளும் என்று அமெரிக்கா நம்பவில்லை. இருந்தாலும் ரஷ்யாவிடம் இந்தியா தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி இந்த போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும் என்பது அமெரிக்காவின் நம்பிக்கையாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்
அமெரிக்க வெளியுறவு செயலாளர் அண்டனி பிளின்கன் வரும் மார்ச் 1 ஆம் தேதி இந்தியா வருகை தர உள்ளார். ஜி 20 நாடுகளுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அண்டணி பிளின்கன் இந்தியா வருகிறார். ஜி 20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பன்முகத்தன்மை, நீடித்த வளர்ச்சி, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை, சுகாதாரம், பாலின சமத்துவம், மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரண போன்ற பல்வேறு விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications