முகத்தில் மாஸ்க்.. கையில் துப்பாக்கி! இழுத்து செல்லப்பட்ட அமெரிக்க இந்தியர்! நாடுகடத்தப்படும் அபாயம்
வாஷிங்டன்: டிரம்ப் வருகைக்குப் பிறகு அந்நாட்டின் குடியேற்ற துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நாடு கடத்தப்படும் அபாயத்தில் தள்ளப்பட்டுள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அதிபர் டிரம்ப் போடும் உத்தரவுகளால் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினர் அச்சத்தில் உள்ளனர். அவர் உத்தரவுகளால் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கைகளை அந்நாட்டுக் குடியேற்ற அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள். அப்படி தான் இப்போது அங்கு பணியாற்றி வந்த இந்தியர் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படும் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளார்.

நாடு கடத்தல் அபாயம்
அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முதுகலை உதவியாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பதர் கான் சூரி, அவர் "தெற்காசியாவில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை உரிமைகள்" என்ற தலைப்பில் பாடங்களை நடத்தி வருகிறார்.. மேலும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமைதியைக் கட்டியெழுப்புவது குறித்த தனது முனைவர் பட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார். முனைவர் பட்டத்திற்குப் படிப்பதை மேற்கோள்காட்டியே அமெரிக்க விசாவும் அவர் பெற்றிருந்தார்.
இவரைத் தான் அமெரிக்க ஏஜெண்டுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர் வர்ஜீனியா வசித்து வந்த நிலையில், வீட்டின் வாசலிலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முகத்தை முழுக்க மூடும் வகையில் மாஸ்க் அணிந்து வந்த அதிரடிப் படையினர் பதர் கானை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
தீவிரவாதியுடன் தொடர்பு?
ஹமாஸுக்கு ஆதரவான கருத்துகளைப் பரப்பியதாகப் பதர் கான் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதியுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருப்பதாகவும் பதர் கான் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் உதவிச் செயலாளர் டிரிசியா மெக்லாஃப்லின் தனது ட்விட்டரில், "ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவராக இருந்த சூரி, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவான கருத்துகளைத் தீவிரமாகப் பரப்பி வந்தார். மேலும், யூத எதிர்ப்புவாதத்தை ஊக்குவித்தார். ஹமாஸின் மூத்த ஆலோசகராக இருக்கும் ஒரு பயங்கரவாதியுடன் சூரிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதன் காரணமாக அவரை நாடுகடத்த முடிவெடுத்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
யார் இந்த பதர் கான்
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் எட்மண்ட் ஏ. வால்ஷ் வெளிநாட்டுச் சேவைப் பள்ளியில் உள்ள அல்வலீத் பின் தலால் முஸ்லிம்-கிறிஸ்தவ புரிதலுக்கான மையத்தில் முதுகலை பட்டதாரியாக இருந்தவர் டாக்டர் பதர் கான் சூரி. அவர் கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் உள்ள நெல்சன் மண்டேலா அமைதி மற்றும் மோதல் தீர்வு மையத்தில் அமைதி மற்றும் மோதல் ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் சார்ந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்துள்ளார். அங்கு இன ரீதியாக வேறுபட்ட சமூகங்களில் ஜனநாயகத்தை அறிமுகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும் அரசு கட்டமைப்பை முன்னிறுத்துவதில் ஏற்படும் சவால்களையும் அவர் தனது ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ளார். மதம், வன்முறை மற்றும் அமைதி, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் இன மோதல்கள் குறித்தும் இவர் ஆய்வு செய்துள்ளார்.
நாடுகடத்தும் அபாயம்
பதர் கானின் மனைவி மாப்ஹேஸ் சலே காசாவை சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடிபுகுந்த அவரும் ஆய்வு மாணவியாக இருக்கிறார். இவர் ஒரு அமெரிக்கக் குடிமகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவி அமெரிக்கக் குடிமகனாக இருந்தாலும் இவர் அமெரிக்கக் குடியுரிமையை இன்னும் பெறவில்லை. இதனால் இவர் நாடுகடத்தப்படலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications