கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்குகிறதா ஈரான்? பரபரப்பை கிளப்பிய பெண்டகன் முடிவு
வாஷிங்டன்: ஈரானில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால், அந்நாட்டு விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம் என்றும் அமெரிக்கா தெரிவித்து இருந்தது. ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். இதனால், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் வீரர்கள் வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரில் உள்ள அல் - உடைட் விமானப்படைத் தளத்தில் இருந்து தனது படைகளின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது என அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போதைய பிராந்திய பதட்டங்கள் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவை கத்தார் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

உச்சக் கட்ட பதற்றம்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களைத் தூக்கிலிட்டால், "மிகக் கடுமையான நடவடிக்கை" எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் சமீபத்திய அடக்குமுறையில் 2,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவால் தாக்கப்படும் பட்சத்தில் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிராந்தியத்தில் ஈரானின் பதட்டங்கள் அதிகரித்துள்ளதால், அல் - உடைட் விமானப்படைத் தளத்தில் உள்ள சில படையினருக்கு புதன்கிழமை மாலைக்குள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கணிசமான எண்ணிக்கையில் படைகளை குறைத்தாலும் இது குறித்த முழு விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.
ஈரானால் குறிவைக்கப்பட்டது
படைகள் குறைக்கப்படும் நடவடிக்கையை கத்தாரும் உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்திய பதட்டங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கத்தாரும் கூறியது. தனது குடிமக்கள், குடியிருப்பாளர்கள், முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ வசதிகளின் பாதுகாப்புக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதாகக் கத்தார் கூறியுள்ளது. எனினும், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் இந்த வெளியேற்ற அறிவுரை குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்தது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஈரானில் தொடரும் போராட்டங்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ராணுவ நடவடிக்கை குறித்த எச்சரிக்கைக்கு மத்தியில் வந்துள்ளது. ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படையினரை நிறுத்தியுள்ள அல்-உடைட் விமானப்படைத் தளம், ஜூன் மாதத்தில் ஈராக்கின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானால் குறிவைக்கப்பட்டது.
இடைமறித்து அழித்தன
அப்போது தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அவற்றில் பெரும்பாலானவற்றை அமெரிக்க மற்றும் கத்தார் படைகள் இடைமறித்து அழித்தன. இந்த மோதலில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இத்தகைய சூழலில்தான் விமானப்படை தளத்தில் இருந்து படைகளை கணிசமான எண்ணிக்கையில் அமெரிக்கா குறைத்துள்ளது.












Click it and Unblock the Notifications