வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடி! சம்பிரதாயப்படி உற்சாக வரவேற்பு! அதிபர் ஜோபைடனுடன் இன்று சந்திப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் நியூயார்க் சுற்றுப்பயணத்தை நேற்று முடித்த பிரதமர் மோடி அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு வாஷிங்டனை சென்றடைந்தார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி துப்பாக்கி குண்டுகள் முழங்க உற்சாகமாக வரவேற்பு வழங்கப்பட்ட நிலையில் இன்று அதிபர் ஜோபைடனை சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளார்.
பிரதமர் 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்கா சென்றார். நேற்று முன்தினம் நியூயார்க் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு நேற்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து நேற்று நியூயார்க்கில் அமைந்துள்ள ஐநா சபை தலைமை அலுவலகத்தில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரதமர் மோடி தலைமையில் 180 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று யோகா செய்து அசத்தினர். இந்த யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் பயணத்தை முடித்துவிட்டு விமானத்தில் வாஷிங்டன் புறப்பட்டு சென்றார். வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடிக்கு சம்பிரதாய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு முறைப்பயணம் என்பதால் துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடியை காண இந்திய வம்சாவளியினர் மற்றும் அமெரிக்கர்கள் அவர் தங்கும் ஓட்டல் அருகே திரண்டு இருந்தனர். அவர்கள் மோடி மோடி கோஷத்துடன் வரவேற்றனர். இதையடுத்து தான் தங்கும் ஓட்டல் அருகே இருந்தவர்களிடம் பிரதமர் மோடி பேசினார்.
வாஷிங்டனில் தான் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு இன்று நடைபெற உள்ளது. முதலாவதாக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவரது மனைவி ஜில் பைடனை சந்திக்க உள்ளார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜோபைடன் சார்பில் சிறப்பு விருந்து அளிக்கப்பட உள்ளது.
இந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் ஏராளமான இந்திய வம்சாவளியினர் பங்கேற்க உள்ளனர். அதன்பிறகுஅமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications