கொரோனாவால் அதிகம் உயிரிழக்கும் கறுப்பினத்தவர்கள்... துணை அதிபராகும் கமலா ஹாரிஸின் அதிரடி செயல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இம்மாத தொடக்கத்தில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இருப்பினும், அமெரிக்காவில் தடுப்பு மருந்து குறித்த சந்தேகம் மக்களிடையே மிக அதிகமாக நிலவுகிறது. இதன் காரணமாக மக்கள் பலரும் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர்.

கறுப்பினத்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு
குறிப்பாக, அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்களுடன் ஒப்பிடுகையில், கறுப்பினத்தவர்களின் மத்தியிலேயே கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. வெள்ளை இனத்தவர்களுடன் ஒப்பிடுகையில் கொரோனாவால் 1.5 மடங்கு அதிகமாக கறுப்பினத்தவர்கள் உயிரிழக்கின்றனர்.

நம்பிக்கையை ஏற்படுத்த ஒரே வழி
இந்நிலையில், தடுப்பு மருந்து குறித்து மக்களிடையே, குறிப்பாக கறுப்பினத்தவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் மக்களுக்கு முன்னிலையில் நேற்று தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டார். அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலுள்ள யுனைடெட் மெடிக்கல் சென்டரில் அவர் தனது தடுப்பு மருந்தின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார். பெருவாரியான கறுப்பினத்து மக்கள் முன்னிலையில் அவர் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டார், இது தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

உதவிகள் உள்ளன
தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட பிறகு பேசிய கமலா ஹாரிஸ், "அனைத்து இன மக்களும் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள முடியும் என்பதை மக்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். கொரோனா வைரசிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவிகள் தற்போது உள்ளன. பொதுமக்கள் தயவு செய்து தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கறுப்பினத்தவரான கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக அடுத்த மாதம் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றுக்கொள்ளவுள்ளார்.

தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட ஜோ பைடன்
முன்னதாக, கடந்த டிசம்பர் 21ஆம் தேதி அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டார். அது நேரலையிலும் ஒளிபரப்பப்பட்டது. கமலா ஹாரிசின் கணவர் டக் எம்ஹாஃப்பும் மக்கள் முன்னிலையில் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டார்.

தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள மறுக்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப், கடந்த அக்டோபர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து அம்மாத இறுதியில் மீண்டும் பிரச்சாரத்திற்குத் திரும்பினார். இருப்பினும், கொரோனா தடுப்பு மருந்தைத் தற்சமயம் எடுத்துக்கொள்ளும் எண்ணமில்லை என்று அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். கொரோனா பாதிப்பை டிரம்ப் தொடர்ந்து குறைத்துக் கூறுவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.94 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு 1.97 கோடியாக அதிகரித்துள்ளது. அவர்களில் 3.46 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications