கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை..மகளை நேரில் அழைத்து சென்று காட்டிய கிம் ஜாங் அன்
வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன், சமீப காலமாக தனது இரண்டாவது மகளான ஜூ ஏ வை பொதுவெளியில் அழைத்து வருகிறார்.
வாஷிங்டன்: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இந்த ஏவுகணை சீறிப்பாய்வதை கிம் ஜாங் உன் தன் மகளான ஜூ ஏவை அழைத்து நேரில் காண்பித்துள்ளார். கிம் ஜாங் உன்னும் அவரது மகளும் ஏவுகணை விண்ணில் சீறிப்பாய்வதை நேரில் பார்வையிடும் பதிவுகள் அடங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுடன் கடும் மோதல் போக்கை கையாண்டு வருபவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்.
வடகொரியா ஒருபக்கம் கடுமையான பஞ்சத்தில் தவித்து வந்தாலும் தொடர்ந்து அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை என ஏவுகணைகளை சோதித்து அடாவடி காட்டி வருகிறார் கிம் ஜாங் அன்.

வெளிப்படையாக அறிவிக்காத கிம்
தன்னைப் பற்றியும் தனது நாட்டைப்பற்றியும் எந்த தகவல்களும் கசிந்து விடாதபடி ரகசியம் காத்து வரும் கிம் ஜாங் உன் சமீப காலமாக தனது 11 வயது மகளை பொதுவெளிக்கு அழைத்து வருகிறார். இதனால், வடகொரியாவின் அடுத்த அரசியல் வாரிசாக தனது மகளை முன்னிறுத்துவதற்கான முன்னேற்பாடாகத்தான் கிம் ஜாங் உன் இவ்வாறு நடந்து கொள்வதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தனது குடும்பம் பற்றியோ தனக்கு எத்தனை குழந்தைகள் உள்ளது என்பது பற்றியோ கிம் ஜான் உன் வெளிப்படையாக ஒருநாளும் அறிவித்தது இல்லை.

ஏவுகணை சோதனை
ஆனாலும் கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே கிம் ஜாங் அன்னின் மகள் ஜூ ஏ, அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில் கூட பங்கேற்று வருகிறார். எனவே ஜூ ஏ பொதுவெளியில் அறிமுகப்படுத்துவதற்கு பின்னால் கிம் ஜாங் அன் பல திட்டங்களையும் வைத்திருக்கலாம் என்றே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சமீப காலமாக ஏவுகணை சோதனைகளை அதிகரித்து வரும் வடகொரியா நேற்று ஒரு ஏவுகணை சோதனை நடத்தி அதிர வைத்தது.

கூட்டு போர் பயிற்சி
அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கூட்டு போர் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு பதிலடியாக தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா ஏவி சோதனை நடத்தியது. அதாவது 3,278 கடல் மைல் (சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர்) தூரம் பாயும் ஏவுகணையை வட கொரியா நேற்று ஏவி பரிசோதனை செய்து பார்த்தது. இந்த ஏவுகணை ஜப்பான் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலம் அருகே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜப்பானும் கடும் கோபத்திற்கு ஆளானது.

நேரில் பார்வையிடும் புகைப்படங்கள்
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 6 ஏவுகணைகளை வட கொரியா ஏவி உள்ளது. வடகொரியாவின் இந்த அடாவடி நடவடிக்கைகள் கொரிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா நடத்திய இந்த ஏவுகணை சோதனையை அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன் நேரடியாக சென்று பார்வையிட்டார். அப்போது தனது மகள் ஜூ ஏவும் உடன் இருந்தார். வடகொரிய செய்தி தாள் Rodong Sinmun இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அசுர ஏவுகணை என்ற டைட்டிலுடன் செய்தி வெளியிட்டுள்ள வடகொரிய செய்தி நிறுவனம், கிம் ஜாங் அன் மற்றும் அவரது மகள் இந்த ஏவுகணை சீறிப்பாய்வதை நேரில் பார்வையிடும் பதிவுகள் அடங்கிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

அரசியல் வாரிசாக நிலைநிறுத்த..
தனது நாட்டையே மர்ம தேசமாக வைத்திருக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சமீப காலமாக தனது இரண்டாவது மகளான ஜூ ஏ வை பொதுவெளியில் அழைத்து வருகிறார். வடகொரியாவின் எதிர்கால அரசியல் வாரிசாக தனது மகளை நிலை நிறுத்துவதற்கான முன்னோட்டமாக கிம் ஜாங் உன் பொதுநிகழ்ச்சிகளிலும் ராணுவ கூட்டங்களிலும் கலந்து கொள்ள வைப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications