பைடனுடன் இணைந்து பணிபுரிய ஆர்வமாக உள்ளோம்... இந்திய தூதரின் அட்டகாசமான வாழ்த்து
வாஷிங்டன்: புதிதாகப் பதவியேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து பணிபுரிய ஆர்வமாக உள்ளதாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரஞ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அவருடன் இணைந்து கமலா ஹாரிஸ் அந்நாட்டின் முதல் பெண் துணை அதிபராகப் பதவியேற்றார். அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாகப் பலத்த கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே வெளிநாட்டுப் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்திய சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து இதில் கலந்துகொண்டார்.
பதவியேற்பு விழாவுக்குப் பின் பேசிய தரஞ்சித் சிங், "இரு நாடுகளின் சர்வதேச உறவுகளை பல்வேறு துறைகளிலும் மேம்படுத்த அதிபர் பைடனின் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளோம். வரும் நாட்களில் அமைய உள்ள சிறப்பான உறவுக்கு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஜனநாயகம், பன்மைத்துவம் ஆகியவை உறுதியான அடித்தளத்தை உருவாக்கும்.
கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் துணை அதிபராகவும் ஜோ பைடன் இருந்த நாட்களில், இந்தியாவுடன் உறவை மேம்படுத்த அவர் காட்டிய ஆர்வம் மிகப் பெரியது. இந்தியா சார்பில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது எனக்கு மிகப் பெரிய கவுரவம். ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிசுக்கும் பிரதமர் மோடி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பைடனுக்கு பல்வேறு உலக தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முதல் மெக்சிகோ சுவர் வரை டிரம்பின் உத்தரவுகளை முதல் நாளே பைடன் ரத்து செய்தார்.












Click it and Unblock the Notifications