Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்கா தொலைத்த 6 அணுகுண்டுகள்.. ஈரான் கையில் கிடைத்தால் என்னவாகும்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அணு ஆயுதங்கள் என்பவை உலகையே ஒரு நொடியில் சாம்பலாக்கும் வல்லமை கொண்டவை. ஆனால், ஒரு வல்லரசு நாடு தனது பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் இத்தகைய மகா அழிவு ஆயுதங்களையே தொலைத்துவிட்டால் என்னவாகும்? இது ஏதோ ஒரு ஹாலிவுட் படக் கதை அல்ல; அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த கசப்பான உண்மை. பனிப்போர் காலம் முதல் இன்று வரை, அமெரிக்கா சுமார் 32 முறை அணு ஆயுத விபத்துகளை சந்தித்துள்ளது.

ராணுவ மொழியில் இவை 'புரோக்கன் ஆரோ' (Broken Arrow) என்று அழைக்கப்படுகின்றன. இதில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், 32 விபத்துகளில் சிக்கிய அணு ஆயுதங்களில் 6 அணு குண்டுகள் இன்றுவரை எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.

Nuclear Weapons

'புரோக்கன் ஆரோ' என்றால் என்ன?

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் வரையறைப்படி, அணு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட எதிர்பாராத விபத்துகள், ஆனால் அவை போருக்கு வழிவகுக்காத நிகழ்வுகளை 'புரோக்கன் ஆரோ' என்பார்கள். இதில் அணு ஆயுதம் திருடப்படுவது, தவறுதலாக கீழே விழுவது, தீ விபத்தில் சிக்கி சேதமடைவது அல்லது கடலில் காணாமல் போவது போன்றவை அடங்கும். பெரும்பாலான சம்பவங்களில் அந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டாலும், ஆறு அணு குண்டுகள் இன்னும் உலகின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக ஆழ்கடலில் புதைந்து கிடக்கின்றன.

1958 டைபி தீவு விபத்து: 15 டன் ஹைட்ரஜன் குண்டு

வரலாற்றின் மிக மோசமான 'புரோக்கன் ஆரோ' சம்பவங்களில் இது முதன்மையானது. பிப்ரவரி 5, 1958 அன்று, ஜார்ஜியாவின் டைபி தீவு (Tybee Island) அருகே ஒரு பயிற்சியின் போது, அமெரிக்காவின் பி-47 பாம்பர் விமானமும், எப்-86 போர் விமானமும் நடுவானில் மோதிக்கொண்டன.

அந்த பி-47 விமானத்தில் சுமார் 7,600 பவுண்டு (3,400 கிலோ) எடையுள்ள 'மார்க் 15' (Mark 15) ஹைட்ரஜன் குண்டு இருந்தது. விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க வேண்டும் என்பதற்காக, விமானி கர்னல் ஹோவர்ட் ரிச்சர்ட்சன் அந்த அணு குண்டை கடலில் வீச முடிவு செய்தார். தரையிறங்கும் போது குண்டு வெடித்தால் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த குண்டு 'வாசா சவுண்ட்' (Wassaw Sound) என்ற கடல் பகுதியில் விழுந்தது.

இந்த குண்டின் சக்தி எவ்வளவு? மார்க் 15 குண்டின் வெடிக்கும் திறன் 3.8 மெகாடன் ஆகும். இது ஜப்பானின் நாகசாகியில் வீசப்பட்ட 'பேட் மேன்' குண்டை விட 190 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. பல தசாப்தங்களாக, அந்த குண்டில் கதிரியக்கப் பொருள் இல்லை என்று அமெரிக்கா கூறி வந்தது. ஆனால், 1994-ல் வெளியான ரகசிய ஆவணங்கள் அது ஒரு முழுமையான அணு ஆயுதம் என்பதை உறுதிப்படுத்தின. இன்றும் அந்த குண்டு கடலுக்கு அடியில் மணலில் புதைந்து கிடக்கிறது.

மத்திய தரைக்கடலில் தொலைந்த ஆயுதம்

ஜனவரி 17, 1966 அன்று, ஸ்பெயினின் பலோமரேஸ் பகுதிக்கு மேலே நடுவானில் எரிபொருள் நிரப்பும் போது, ஒரு பி-52 விமானமும், கேசி-135 டேங்கர் விமானமும் மோதிக்கொண்டன. அந்த பி-52 விமானம் நான்கு பி-28 தெர்மோநியூக்ளியர் குண்டுகளை சுமந்து சென்றது. விபத்திற்குப் பிறகு மூன்று குண்டுகள் நிலத்தில் விழுந்தன, இதனால் கதிரியக்கக் கசிவு ஏற்பட்டது. ஆனால் நான்காவது குண்டு மத்திய தரைக்கடலில் விழுந்தது.

ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு மீனவர் வெள்ளை நிறப் பொட்டலம் ஒன்று கடலில் விழுவதைப் பார்த்ததாகத் தெரிவித்தார். சுமார் 80 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அந்த குண்டு மீட்கப்பட்டாலும், அதன் சில முக்கிய பாகங்கள் (Warhead components) இன்னும் கிடைக்கவில்லை என்று சில அறிக்கைகள் கூறுகின்றன.

1965 பிலிப்பைன்ஸ் கடல் விபத்து: விமானத்துடன் மூழ்கிய குண்டு

டிசம்பர் 1965-ல் வியட்நாம் போரின் போது, அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் டைகோண்டெரோகா' கப்பலில் ஒரு விபத்து ஏற்பட்டது. பி-43 அணு குண்டை சுமந்திருந்த ஏ-4இ ஸ்கைஹாக் (A-4E Skyhawk) விமானம், கப்பலின் தளத்திலிருந்து நழுவி கடலில் விழுந்தது.

சுமார் 16,000 அடி ஆழத்தில் அந்த விமானம், விமானி மற்றும் அணு குண்டு என அனைத்தும் மூழ்கின. கடலின் அதீத ஆழம் காரணமாக அதை மீட்கவே முடியவில்லை. ஜப்பானின் ஒகினாவா கடற்கரைக்கு சற்று தொலைவில் அந்த அணு குண்டு இன்றும் உறங்கிக் கொண்டிருக்கிறது.

1968 கிரீன்லாந்து விபத்து

ஜனவரி 1968-ல், ஒரு பி-52 விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டு, அது கிரீன்லாந்தின் துலே விமான தளம் அருகே பனிக்கட்டியில் மோதி நொறுங்கியது. அந்த விமானத்தில் நான்கு அணு குண்டுகள் இருந்தன. விபத்திற்குப் பிறகு ஒரு பெரிய தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், ஒரு அணு குண்டின் பாகங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பனிக்கட்டி உருகியதால் அது கடலுக்குள் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தற்போதைய அச்சம்

இந்த பட்டியலில் 1956-ல் மத்திய தரைக்கடலுக்கு மேலே மறைந்து போன விமானமும் அடங்கும். அந்த விமானம் இரண்டு அணுக்கருக்களை (Nuclear cores) சுமந்து சென்றது, ஆனால் இன்றுவரை அந்த விமானத்தின் தடயமே கிடைக்கவில்லை. அதேபோல் 1961-ல் நார்த் கரோலினாவில் விழுந்த ஒரு அணு குண்டின் யுரேனியம் பகுதி நிலத்தில் மிக ஆழமாகப் புதைந்துவிட்டதால் அதை வெளியே எடுக்க முடியவில்லை.

ஈரான் மற்றும் தற்போதைய உலக சூழல் சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்த போது, இந்த 'காணாமல் போன' அணு ஆயுதங்கள் குறித்த கவலை மீண்டும் எழுந்தது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அமெரிக்காவால் அவ்வப்போது முடக்கப்பட்டாலும், அவர்கள் அணு ஆயுத வல்லமையைப் பெறத் துடிப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஒருவேளை கடலில் இருக்கும் இந்த பழைய அணு குண்டுகள் யாருடைய கையிலாவது கிடைத்தால், அது உலகப் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக முடியும்.

"எங்களால் கண்டுபிடிக்க முடியாத குண்டுகளை எதிரிகளாலும் கண்டுபிடிக்க முடியாது" என்று அமெரிக்கா ஒரு தற்காப்பு வாதத்தை முன்வைக்கிறது. ஆனால், கடல் நீரோட்டங்கள் மாறுவதாலோ அல்லது எதிர்கால நவீன தொழில்நுட்பங்களாலோ இவை தவறான கைகளுக்குச் சென்றால், அது பேரழிவை ஏற்படுத்தும். 'புரோக்கன் ஆரோ' நிகழ்வுகள் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான்: அணு தொழில்நுட்பம் எவ்வளவு சக்தி வாய்ந்ததோ, அதே அளவு ஆபத்தானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+