இந்தியர்களுக்கு பெரிய சிக்கல்.. H-1B விசாவை நிறுத்தும் டிரம்ப் அரசு? இனி அமெரிக்க கனவு எல்லாம் காலி?
வாஷிங்டன்: அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்கள் பலரும் ஹெச்-1பி விசா மூலமாகவே அதிகம் பயனடைகிறார்கள். இந்தச் சூழலில் தான் ஹெச்-1பி மற்றும் கிரீன் கார்டு முறையைத் தடாலடியாக மாற்றுவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கே அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவில் பல்வேறு வெளிநாட்டினர் தங்கி வேலை செய்து வருகிறார்கள். அதில் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. குறிப்பாக ஐடி துறையில் இந்தியர்களே அதிகம் உள்ளனர். இதுபோல அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் ஹெச்-1பி மூலமாகவே விசாவை பெறுகிறார்கள்.

ஹெச்-1பி ஒரு மோசடி திட்டம்
இதற்கிடையே அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லட்னிக் இந்த விசா முறை குறித்துச் சொல்லியிருக்கும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இப்போது நடைமுறையில் இருக்கும் ஹெச்-1பி (H-1B) விசா திட்டம் "மோசடி" திட்டம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.. இது அமெரிக்க ஊழியர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதாகவும், இந்தத் திட்டத்தில் பெரிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹெச்-1பி விசா முறையில் இந்தியர்கள் அதிகம் பயனடையும் நிலையில், டிரம்ப் அரசு கொண்டு வரும் மாற்றம் இந்தியர்களை அதிகம் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
இது தொடர்பாக லட்னிக் மேலும் கூறுகையில், "இப்போது இருக்கும் ஹெச்-1பி விசா அமைப்பு ஒரு மோசடி. அமெரிக்கர்களுக்காக இருக்கும் வேலைவாய்ப்பை வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்டு நிரப்ப அனுமதிக்கிறது. அமெரிக்க ஊழியர்களையே அனைத்து அமெரிக்க வணிகங்களுக்கும் பணியமர்த்த வேண்டும். அதுவே முன்னுரிமையாக இருக்க வேண்டும்!
எல்லாமே மாறுது
இப்போது ஹெச்-1பி விசா லாட்டரி அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதை மாற்றி, தகுதி அடிப்படையில் ஒருவருக்கு விசா கொடுக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தும் திட்டங்களை உருவாக்கி வருகிறோம்.. இதற்காக நாங்கள் ஹெச்-1பி விசா திட்டத்தை மாற்றப் போகிறோம்.. ஏனெனில் அது மிகவும் மோசமானது.
அது மட்டுமில்லை கிரீன் கார்டு முறையையும் மாற்றப் போகிறோம். இப்போது இருக்கும் கிரீன் கார்டு முறையில் தகுதி இல்லாதவர்களும் பயனைப் பெறுகிறார்கள். சராசரி அமெரிக்கர் ஆண்டுக்கு $75,000 சம்பாதிக்கிறார். ஆனால் $66,000 சம்பாதித்தாலே கிரீன் கார்டு தருவோம் என்பது எந்த விதத்தில் சரி. நாம் ஏன் இதைச் செய்கிறோம்? இது தவறான போக்கு.
திறமையானவர்களை ஈர்ப்போம்
டொனால்ட் டிரம்ப்பின் தலைமையின் கீழ், இதற்கு மாற்றாகப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருகிறோம்.இதன் மூலம் குடியேற்றக் கொள்கைகளை மாற்றி அமைக்கப் போகிறோம். பணக்கார மற்றும் திறமையான நபர்களை ஈர்க்கும் வகையில் திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். டொனால்ட் டிரம்ப் இதை மனதில் வைத்தே வேலை செய்து வருகிறார். இதற்காகத் தான் கோல்ட் கார்டு (Gold Card) இருக்கிறது. இதன் மூலம் நமது நாட்டிற்குத் தேவையான சிறந்தவர்களைத் தேர்வு செய்ய முடியும்" என்றார்.
தொடர்ந்து "கோல்ட் கார்டு" திட்டம் குறித்த விவரங்களை வெளியிட்ட லட்னிக், "இதன் மூலம் அமெரிக்காவில் குறைந்தபட்சம் $5 மில்லியன் முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படும்.. இத்திட்டத்திற்கு ஏற்கனவே தேவை அதிகமாக இருக்கிறது. சுமார் 2.5 லட்சம் பேர் விண்ணப்பிக்கக் காத்திருக்கிறார்கள். இதன் மூலம் அமெரிக்காவுக்கு $1.25 டிரில்லியன் முதலீட்டை ஈர்க்க முடியும். மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது" என்றார்.
கோல்டன் கார்டு
அதாவது ஹெச்-1பி விசா முறையை நிறுத்திவிட்டு கோல்டன் கார்டு திட்டத்தை முன்னெடுக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்திருப்பதையே இது காட்டுகிறது. ஆனால், டிரம்ப்பே கூட இதற்கு முன்பு ஹெச்-1பி திட்டத்தை ஆதரித்திருந்தார். திறமையான மற்றும் சிறந்த நபர்களை அமெரிக்காவிற்குக் கொண்டு வருவதற்கு இந்தத் திட்டம் அவசியம் என்றும் இது எல்லாருக்கும் நன்மை தரும் என்றும் டிரம்ப் சொல்லியிருந்தார். இந்தச் சூழலில் தான் அதற்கு நேர்மாறான கருத்துகளை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறியிருக்கிறார்.
இந்தியர்களுக்கே பாதிப்பு அதிகம்!
டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்களாகவே இருக்கும். ஏனென்றால் கடந்த 2023 நிதியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட ஹெச்-1பி விண்ணப்பங்களில் 72 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே போனது.. இது சீனாவை (11.7 சதவீதம்) விட மிக அதிகமாகும். இப்போதும் கூட ஆண்டுக்கு 65,000 ஹெச்-1பி விசாக்கள் இந்தியர்களுக்கே ஒதுக்கப்படுகின்றன. இது தவிர அமெரிக்காவில் உயர்கல்வி படிப்போருக்கு 20,000 கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் லாட்டரி முறை மூலம் ஒதுக்கப்படுகின்றன. இதை மாற்றவே டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
அதேநேரம் இந்தத் திட்டத்தை மாற்றினால் அமெரிக்கர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்பதையும் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் ஒருவேளை டிரம்ப் நிர்வாகம் இதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தால் அமெரிக்க நிறுவனங்கள் இதை இந்தியாவில் அவுட்சோர்சிங் செய்துவிடும். அல்லது ஒர்க் ஃபர்ம் ஹோம் முறையில் வேலைகளைக் கொடுத்துவிடும். அதாவது அமெரிக்கப் பணியாளர்களுக்குப் பதிலாக இந்தியர்கள் வேலை செய்வது தொடரவே செய்யும். டிரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.












Click it and Unblock the Notifications