"அவர் என்ன மன்னரா.." அமெரிக்காவில் வெடித்த மாபெரும் போராட்டம்.. வசமாக சிக்கும் டிரம்ப்.. சிக்கல்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக அங்கு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது. டிரம்ப் ஒன்றும் மன்னர் இல்லை என்றும் அவர் சட்டத்தின்படி ஆட்சி செய்ய மறுப்பதாகவும் சொல்லி அங்கு மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் அமெரிக்கா முழுக்க பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றவர் டிரம்ப். அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவேன் என்பதைப் பிரதான வாக்குறுதியாக அவர் முன்வைத்தார். அதன்படி அதிபராகப் பொறுப்பேற்ற முதல் நாளே இதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார்.

அதிபர் டிரம்ப்
டிரம்ப் இந்தளவுக்குக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர். பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தவர்களும் கூட நாடுகடத்தப்பட்டனர். இதனால் சில சூழல்களில் அமெரிக்காவில் பிறந்த பிள்ளைகளை பெற்றோர் பிரிய வேண்டி இருந்தது. இப்படி அமெரிக்கா முழுக்க சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.
விதிகளை மதிப்பதில்லை
இருப்பினும், டிரம்ப்பின் நிர்வாகத்தினர் முறையாக விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதாவது ஒருவர் அந்நாட்டுக் குடியேற்ற அதிகாரிகளால் கைது செய்யப்பட்டால்.. அதன் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அவர் தனது நிலையை விளக்க வாய்ப்பு தர வேண்டும். அவருடைய வாய்ப்புகள் அனைத்தும் முடிந்த பின்னரே அவரை நாடுகடத்த முடியும். ஆனால், டிரம்ப் நிர்வாகம் அதையெல்லாம் பார்ப்பதில்லை. ஒரு வழக்கில் நீதிமன்றம் உத்தரவிடும் முன்பே அவசர அவசரமாக நாடுகடத்தும் சம்பவமும் கூட நடந்தது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் அமெரிக்காவில் டிரம்ப் மீதான கோபம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயிலும் கூட டிரம்ப்பிற்கான மக்கள் ஆதரவு மிக மோசமாக சரிந்துள்ளது. இதற்கிடையே டிரம்ப்பிற்கு எதிராக மக்கள் போராட்டமும் அங்கு மிகப் பெரியளவில் வெடித்துள்ளது. அங்கு நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் டிரம்பிற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகிறது.
யாரும் மன்னர்கள் இல்லை
நியூயார்க், வாஷிங்டன் உட்பட அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் பல ஆயிரம் பேர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். நியூயார்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் "அமெரிக்காவில் யாரும் மன்னர்கள் இல்லை" மற்றும் "கொடுங்கோன்மையை எதிர்ப்போம்" போன்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.
அதேபோல அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன்னிலும் டிரம்ப்பிற்கு எதிரான போராட்டங்கள் நடந்தது. அமெரிக்க அரசியலமைப்பு விதிமுறைகளைக் காலி செய்யும் வகையில் டிரம்ப் நடந்து வருவதாகவும் சட்டத்தின்படி அவர் ஆட்சி செய்வதில்லை என்றும் சாடி வருகிறார்கள். மேலும், அமெரிக்காவில் வசிக்கும் மக்களைத் துஷ்பிரயோகம் செய்வதை அரசு நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
வசமாக சிக்கும் டிரம்ப்?
சட்டவிரோதக் குடியேற்றம் மட்டுமின்றி டிரம்ப்பின் இதர நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. டிரம்ப் தரப்பு பல்வேறு பெடரல் ஏஜென்சிகளுக்கு செல்லும் நிதியைச் செலவைக் குறைக்கிறேன் எனக் குறைத்துள்ளார். இதனால் பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல பல்கலைக்கழகங்களுக்கும் பல அழுத்தங்களைக் கொடுக்கிறார். இதெல்லாம் அமெரிக்க மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.
இதன் காரணமாகவே டிரம்ப்பிற்கு எதிராக இப்போது மாபெரும் போராட்டம் வெடித்துள்ளது. அவர் அதிபராகப் பதவியேற்றது முதலே போராட்டம் நடந்து வரும் சூழலில், போராட்டத்தின் வீரியம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஒருகட்டத்தில் இந்தப் போராட்டங்கள் டிரம்ப்பிற்கு நிச்சயம் தலைவலியாக மாறும்.












Click it and Unblock the Notifications