முடிவுக்கு வந்த போர்.. "ஈரான் மீதான தாக்குதல் 2 வாரங்களுக்கு நிறுத்தம்.." அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்கா ஈரான் இடையேயான போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்த நிலையில், இந்த விவகாரத்தில் இப்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அடுத்த இரு வாரங்களுக்குப் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். இதன்படி இரு தரப்பும் அடுத்த இரு வாரங்களுக்குத் தாக்குதல் நடத்தாது. இந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி ஈரானுடன் இறுதி ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா முயலும்.
வளைகுடாவில் கடந்த பிப்ரவரி இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தியது. இந்த மோதல் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக மோதலை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். குறிப்பாகப் போர் நிறுத்தம் செய்ய ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ஒட்டுமொத்த ஈரானும் அழியும் என்றும் அவர் மிரட்டியிருந்தார்.

போர் நிறுத்தம்
இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே ஈரானுடன் இரு வாரப் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு டிரம்ப் ஒப்புக்கொண்டார். இதன்மூலம், அந்நாட்டின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது. பாகிஸ்தான் மூலம் வந்த போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் அறிவித்தார். அதன்படி இரு தரப்பும் அடுத்த இரு வாரங்களுக்குத் தாக்குதல் நடத்தாது. இந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி ஈரானுடன் இறுதி ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா முயற்சிக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அறிவிப்பு
இது தொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில் மேலும், "ஈரானுக்கு எதிரான குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்களை இரண்டு வார காலத்திற்கு நிறுத்துகிறோம். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் அசீம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இருப்பினும், இந்த போர் நிறுத்தத்திற்கு ஒரு நிபந்தனை உள்ளது.. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும், இது இருதரப்பு போர் நிறுத்தம். பரஸ்பர மோதல்கள் தற்காலிகமாக முடிவுக்கு வரும். அனைத்து ராணுவ இலக்குகளும் எட்டப்பட்டுவிட்டது. இதன் காரணமாகவே போர் நிறுத்த முடிவை எடுக்கிறோம். ஈரானுடனும் மத்திய கிழக்குடனும் நீண்டகால அமைதிக்கான உறுதியான ஒப்பந்தத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் 10 அம்ச முன்மொழிவு பேச்சுவார்த்தைக்கு நல்ல ஒரு தொடக்கம்.
தீர்வு காண்போம்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பெரும்பாலான கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டன. இந்த இரண்டு வாரங்கள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய உதவும். அமெரிக்க ஜனாதிபதியாக, மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதியாக, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது எனக்குப் பெருமை" என்றார்.
ஈரான் அறிவிப்பு
அதேபோல போர் நிறுத்தம் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ஷியும் உறுதி செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிரதமர் ஷெரிப்பின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக அறிவிக்கிறேன். ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், எங்கள் சக்திவாய்ந்த ஆயுதப் படைகள் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்தும்.. இரண்டு வார காலத்திற்கு ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் ஈரான் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து செல்லலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications