சீனாவுக்கு கை மாறிய ரகசிய தகவல்கள்.. இந்திய வம்சாவளியை கைது செய்த அமெரிக்கா! உண்மை என்ன?
வாஷிங்டன்: அமெரிக்கா-இந்தியா உறவுகள் தொடர்பான பிரபல நிபுணர் ஆஷ்லே டெல்லிஸ், ரகசிய ஆவணங்களைச் சேகரித்து வைத்துக்கொண்டு சீன அதிகாரிகளைச் சந்தித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த அமெரிக்க ஆய்வாளர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
தெற்காசிய கொள்கைகள் குறித்த நீண்டகால ஆலோசகரான டெல்லிஸ் இருந்து வந்திருக்கிறார். இவர் மீது தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட தகவலின்படி, 64 வயதான ஆஷ்லே டெல்லிஸ், வர்ஜீனியாவின் வியன்னாவில் உள்ள தனது வீட்டில் ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமான உயர்மட்ட ரகசிய மற்றும் ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க-இந்தியா உறவுகள் குறித்து நீண்டகாலமாகப் பேசிவரும் டெல்லிஸ், பல நிர்வாகங்களின் கீழ் பணியாற்றியுள்ளார். ஜார்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்தின் கீழ் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலில் பணியாற்றியுள்ளார். மேலும், எஃப்.பி.ஐ பிரமாண பத்திரத்தில் மாநிலத் துறைக்கு ஊதியம் பெறாத ஆலோசகராகவும், பென்டகனின் நெட் அசெஸ்மென்ட் அலுவலகத்தின் ஒப்பந்ததாரராகவும் பணியாற்றியுள்ளார். வாஷிங்டனைச் சேர்ந்த கார்னகி என்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸின் மூத்த உறுப்பினராகவும் உள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்தில் இணைந்த டெல்லிஸ், இந்தியா மற்றும் தெற்காசியா தொடர்பான கொள்கைகளில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களுக்கு ஆலோசனை வருகிறார். ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் ரகசிய ஆவணங்களை தவறாகக் கையாண்டவர்கள் மீது எந்த விதிவிலக்கும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், தற்போது டெல்லிஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மும்பையில் பிறந்த டெல்லிஸ், சிகாகோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்கா-இந்தியா-சீனா கொள்கை வட்டாரத்தில் ஒரு பிரபலமான முகமாக மாறிய அவர், அவரது எழுத்துக்கள் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே கவனம் பெற்றிருந்தன.
தற்போது இவர் மீது தேசிய பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டுகள் பதிவாகியிருக்கின்றன. அதாவது, டெல்லிஸ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை கட்டிடங்களில் இருந்து ரகசிய ஆவணங்களை அணுகி, அச்சிட்டு எடுத்து சென்றிருக்கிறார். அமெரிக்க ராணுவ விமானங்களின் திறன்கள் தொடர்பான ரகசிய கோப்புகளை அச்சிட்ட பிறகு, அரசு அலுவலகத்திலிருந்து லெதர் பிரீஃப்கேஸுடன் அவர் வெளியேறும் காட்சிகள் சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
கடந்த 11ம் தேதி அன்று நடத்தப்பட்ட சோதனையில், அவரது வீட்டில் உள்ள பூட்டப்பட்ட கோப்பு பெட்டிகள், அடித்தள அலுவலக மேசை மற்றும் சேமிப்பு அறையில் உள்ள குப்பை பைகள் உட்பட பல இடங்களில் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அமெரிக்காவை பொறுத்தவரை ரகசிய ஆவணங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வது சட்டப்படி தவறு. டிரம்ப் இதற்கு முன்னர் அதிபராக இருந்தபோல, பல ஆவணங்களை தனது வீட்டிற்கு எடுத்து சென்றதாக புகார்கள் எழுந்தன.
கடந்த சில ஆண்டுகளாக சீன அரசாங்க அதிகாரிகளை டெல்லிஸ் பலமுறை சந்தித்ததாகக் கூறப்படுவதால், இந்த வழக்கு மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த மாதம் 15ம் தேதி, வர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸில் உள்ள ஒரு உணவகத்தில், சீன ஆதிகாரிகளை டெல்லிஸ் சந்தித்து பேசியதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. டெல்லிஸ் ஒரு மஞ்சள் உறை அட்டையுடன் வந்ததாகவும், அவர் புறப்படும்போது அந்த உறை அவரிடம் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே ரகசிய ஆவணங்கள் சீனாவுக்கு விற்கப்பட்டதா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications