சிலிர்க்குதே! ஒரேயொரு போட்டோ தான்! மிஸ்ஸான பழங்கால முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு! செம
வாஷிங்டன்: தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் சிவன் கோவிலில் இருந்து 2000ம் ஆண்டில் மிஸ்ஸான 7 ம் நூற்றாண்டு பல்லவர் காலத்து பழமையான முருகன் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் தான் பத்திரிகையில் வந்த ஒரேயொரு போட்டோவை வைத்து அமெரிக்காவில் சிலை இருப்பதை கண்டுபிடித்த பின்னணி தகவல் சிலிர்க்க வைக்கிறது.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது பழங்கால சிலைகளையும், அரிய பொக்கிஷங்களையும் வெளிநாடுகளுக்கு கடத்தி சென்றனர். குறிப்பாக பல்வேறு சந்தரப்பங்களில் தமிழ்நாட்டில் இருந்து பழங்கால சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன.

இந்த சிலைகளை கண்டுபிடித்து மீட்கும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 7 ம் நூற்றாண்டின் பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:
கள்ளக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற தச்சூர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 7 ம் நூற்றாண்டு பல்லவர் காலத்து முருகன் சிலை இருந்தது. இந்நிலையில் தான் கடந்த 23 ஆண்டுகளுக்கு இந்த சிலை திடீரென மாயமானது. அந்த வகையில் கடந்த 3-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெரியசாமி உடையார் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் 7ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 13 பழங்கால சிலைகள் இருந்தன. கடந்த 2000ம் ஆண்டு பழங்கால முருகன் சிலை திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ கோயிலுக்கு சொந்தமான மூன்று சிலையை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டறிந்து ஒப்படைத்த நிலையில் அவர் இந்த புகாரை கொடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்த சிலையை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். பொதுவாக மாயமான சிலைகளை கண்டுபிடிப்பதில் பெரிய சிரமம் இருக்கும்.
இதனால் சிலையை கண்டுபிடிப்பது என்பது எளிமையான காரியமாக இருக்காது. அதேபோல் தான் இந்த முருகன் சிலையை கண்டுபிடிப்பதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு பெரிய சவாலாக இருந்தது. இருப்பினும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விடவில்லை. தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர்.

குறிப்பாக ‛தடயம்' என்ற பத்திரிகையில் அந்த முருகன் சிலை தொடர்பான போட்டோ வெளியாகி இருந்தது. அந்த போட்டோவை அடிப்படையாக கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் தான் தற்போது அந்த முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் உள்ள ஹோம் லேண்ட் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திடம் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து அந்த சிலையை தமிழகம் மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் அடிப்படையில் முருகன் சிலையை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications