"334 அணுகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தது போல.." மியான்மர் பூகம்பம்.. கொடூரத்தை விளக்கும் ஆய்வாளர்
மியான்மர்: மியான்மரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவுக்கு மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகளும் 2000ஐ கடந்துள்ளது. இதற்கிடையே இந்த பூகம்பத்தின் போது வெளியான ஆற்றல் தொடர்பாக புவியியல் ஆய்வாளர் ஜெஸ் பீனிக்ஸ் பகீர் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மியான்மர் நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. முதலில் 7.7 ரிக்டரில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சில நிமிடங்களில் 6.7 ரிக்டரில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இது சகாயிங் என்ற பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. அதன் பிறகும் தொடர்ச்சியாகச் சிறிய நில அதிர்வுகள் அங்குத் தொடர்ந்து கொண்டே இருந்தது.

பூகம்பங்கள்
இந்த மிகப் பெரிய பூகம்பங்கள் மியான்மர் நாடு முழுக்க உணரப்பட்டது. மேலும், தாய்லாந்து தலைநகர் பாங்காக், இந்திய வடகிழக்கு மாநிலங்கள், சீனாவின் கிழக்கு மாகாணங்கள், கம்போடியா எனப் பல இடங்களில் உணரப்பட்டது. மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள எமர்ஜென்சி நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம் குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது சுமார் 300க்கும் மேற்பட்ட அணுக்குண்டுகளுக்கு இணையான ஆற்றல் வெளியானதாக புவியியலாளர் ஒருவர் கூறினார். மேலும், இப்பகுதியில் தொடர்ந்து ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் அவர் எச்சரித்தார்.
2000ஐ கடந்த உயிரிழப்புகள்
மியான்மரில் உள்ள மண்டலே நகரில் மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000ஐ தாண்டக்கூடும் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
334 அணுகுண்டுகள்
இதற்கிடையே அமெரிக்கப் புவியியல் மைய ஆய்வாளர் ஜெஸ் பீனிக்ஸ் கூறுகையில், "இந்த நிலநடுக்கத்தின் போது சுமார் 334 அணுகுண்டுகளுக்கு சமமான ஆற்றல் வெளியானது. அதேநேரம் இது இதோடு நிற்கப் போவது இல்லை. இந்திய டெக்டோனிக் தட்டு மியான்மருக்கு அடியில் உள்ள யூரேசிய தட்டுடன் தொடர்ந்து மோதி வருகிறது. இதனால் பூகம்பத்திற்கு பிறகான நில அதிர்வுகள் பல மாதங்கள் வரை நீடிக்கும். மியான்மரில் ஏற்கனவே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
அங்கு ராணுவ ஆட்சி நிலவும் சூழலில் தகவல் தொடர்பு முடங்கியுள்ளது. இதனால் பேரழிவின் தாக்கத்தை உலகினால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டுப் போரால் மியான்மரின் பேரழிவு மேலும் மோசமடையும்" என்று அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாடுகள் உதவி
மியான்மரில் இந்தளவுக்கு மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் உதவிக்கு விரைந்துள்ளன. ஏற்கனவே இந்தியா போர்வைகள், தார்பாய்கள், சுகாதாரப் பெட்டிகள், சோலார் விளக்குகள், உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியுள்ளது. மேலும், மருத்துவப் பிரிவினர் அடங்கிய ஒரு தேடல் மற்றும் மீட்புக் குழுவையும் இந்தியா அனுப்பியுள்ளது..
சீனா சார்பில் உயிர் கண்டறியும் கருவிகள், பூகம்ப முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட அவசரக்கால நிவாரணப் பொருட்களைக் கொண்ட 37 பேர் கொண்ட குழு மியான்மர் விரைந்துள்ளது. பேரிடர் நிவாரணம் மற்றும் மருத்துவச் சிகிச்சை உதவிகளுக்காகச் சீனா இந்த குழுவை அனுப்பியுள்ளது. ரஷ்யாவும் அத்தியாவசிய பொருட்களுடன் 120 பேரை மீட்புப் பணிகளுக்காக அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications