"பென்னு.." 200 கோடி கிமீ தொலைவில் இருந்தாலும் கச்சிதமாக தட்டி தூக்கிய நாசா.. பூமிக்கு திரும்பியது
வாஷிங்டன்: பூமியில் இருந்து சுமார் 200 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சிறுகோளில் இருந்து அதன் மாதிரிகளை நாசா விண்கலம் வெற்றிகரமாகச் சேகரித்து எடுத்து வந்துள்ளது.
நமது விண்வெளியில் பல நூறு மர்மங்கள் நிறைந்து இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பம் என்பது சிறியது. ஆனால், இந்த சூரியக் குடும்பம் குறித்தே நமக்கு முழுமையாகத் தெரியாது. இதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் தான் விண்வெளி ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குறிப்பாக நாசா இது குறித்த ஆய்வுகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இங்கே பென்னு (Bennu) என்ற சிறுகோள், அதாவது எரிகல்லில் இருந்து மாதிரிகளைச் சேகரிக்க நாசா முடிவு செய்தது.
எரிகல்: இந்த பென்னு எரிகல் நமது பூமியைப் போலவே சூரியனைத் தான் சுற்றி வருகிறது. பூமியில் இருந்து சுமார் 200 கோடி கிமீ தொலைவில் உள்ள பென்னு எரிகல், சுமார் 500 மீட்டர் அகலம் கொண்டதாகும். இது பூமிக்கு முன்பே தோன்றியதாக இருக்கலாம் என்றும் அது குறித்து ஆய்வு செய்தால் பூமியின் தோற்றம் குறித்த முக்கிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியாம் என்பதால் பென்னு எரிக்கலில் இருந்து மாதிரிகளைச் சேகரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணிகளை நாசா கடந்த 2016இல் ஆரம்பித்தது. இதற்காக ஒசைரிஸ்- ரெக்ஸ் என்ற விண்கலனை நாசா விண்ணுக்கு அனுப்பியது. பல கோடி கிமீ தொலைவில் இருக்கும் அந்த எரிகல்லைச் சென்றடையவே ஒசைரிஸ்- ரெக்ஸ் விண்கலனுக்கு பல ஆண்டுகள் ஆனது. இந்த பயண நேரத்தில் எங்கிருந்து மாதிரிகளை எடுக்கலாம் என்பதையும் நாசா முடிவு செய்தது. அதன்படி கடந்த 2020 அக். 20ஆம் தேதி எரிகல் மாதிரி எடுக்கப்பட்டது.
நாசா: இதற்காக பென்னுவின் தரைக்கு மிக அருகே சென்ற ஒசைரிஸ்- ரெக்ஸ், அதன் 3 மீட்டர் கையை வெளியே நீட்டியது. பென்னுவின் மேற்பரப்பு கடினமாக இருக்கும் என்பதால் அதை நைட்ரஜன் வாயுவைக் கொண்டு வெடிக்க வைத்து அதில் இருந்து மாதிரியைச் சேகரிக்க முடிவு செய்தனர். இரும்பினும், அங்கே மேற்பரப்பைத் தொட்டதும் நடந்தது அனைவருக்குமே ஷாக். ஏனென்றால் அது அனைவரும் எதிர்பார்த்துப் போலக் கடினமானதாக இல்லை. திரவம் போலப் பிரிந்தது.
இதையடுத்து திட்டமிட்டபடி நைட்ரஜன் வாயு மூலம் வெடிக்க வைக்கப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அதன் பிறகு ஒசைரிஸ்- ரெக்ஸ் மீண்டும் பூமியை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்து. இந்த விண்கலன் தான் நேற்றைய தினம் சின்ன கேப்சியூலில் இந்த மாதிரியைப் பூமியை நோக்கி அனுப்பியது. கேப்சியூலை விடுவித்த ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் தனது பாதையை மாற்றிக் கொண்டது. ஒசைரிஸ் -ரெக்ஸ் விண்கலன் ஏன் பூமிக்குத் திரும்பவில்லை எனக் கேட்கலாம்.
எரிகல் மாதிரிகள்: அது இந்த கேப்சியூல் பின்னாலேயே வந்திருந்தால், அதன் மீதே மோதி சேகரிக்கப்பட்ட மணல் துகள் முற்றிலும் அழிந்து போக வாய்ப்பு இருந்தது. இதன் காரணமாகவே அதன் திசையை மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அந்த ஒசைரிஸ்- ரெக்ஸ் விண்கலம் இப்போதும் ரெஸ்ட் எடுக்கவில்லை, அடுத்து அபோஃபிஸ் என்ற எரிக்கல்லொ நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் அபோஃபிஸ் எரிகல்லிடம் இந்த ஒசைரிஸ்- ரெக்ஸ் விண்கலம் 2029இல் செல்லும்.
ஒசைரிஸ்- ரெக்ஸ் அனுப்பிய கேப்சியூல் நேற்றைய தினம் காலை 9 மணியளவில் அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தில் வந்து விழுந்தது. இதில் பென்னு எரிகல்லில் இருந்து சேகரிக்கப்பட்ட 250 கிராம் மாதிரிகள் இருக்கிறது. இந்த மாதிரிகள் இப்போது முதற்கட்டமாக அருகிலேயே இருக்கும் தற்காலிக ஆய்வு அறையில் வைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் நாசா இது குறித்த ஆய்வுகளைத் தீவிரப்படுத்த உள்ளது.












Click it and Unblock the Notifications