விரைவில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. அழைத்து வர விண்ணில் பாய்ந்தது Space X-ன் விண்கலம்!
வாஷிங்டன்: விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ். 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸை அழைத்து வரச் சென்றது Space X-ன் எண்டூரன்ஸ் விண்கலம்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அங்கு ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14 ஆம் தேதி பூமிக்கு திரும்பத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்தச் சூழலில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர்கள் இருவரும் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 9 மாதங்களுக்கும் மேலாக அவர்கள் விண்வெளியில் தங்கி இருக்கின்றனர். பிப்ரவரி மாதம் தான் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்பேஸ் எக்ஸ் திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் காரணமாக அவர்கள் மார்ச் மாதத்தில் தான் திரும்புவார்கள் எனத் தகவல் வெளியானது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை பூமிக்கு அழைத்து வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன்படி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் என்டூரன்ஸ் விண்கலம் கடந்த 12-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் விண்கலம் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது. க்ரூ டிராகன் ராக்கெட் ஏவுதளத்தில் உள்ள ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மிஷன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, மார்ச் 14 ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடா கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ஏவுகணை மூலம் என்டூரன்ஸ் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆனி மெக்கிளைன், நிக்கோலி அயர்ஸ், ஜப்பான் விண்வெளி வீரர் டகுயா ஒனிஸி, ரஷ்ய விண்வெளி வீரர் கிரிஸ் பெஸ்கோவ் ஆகியோர் சென்றுள்ளனர்.
மார்ச் 15 ஆம் தேதியான இன்று சர்வதேச விண்வெளி மையத்தில் என்டூரன்ஸ் விண்கலம் இணையும். இந்த ராக்கெட் இன்றிரவு 11.30 மணியளவில் ஐ.எஸ்.எஸ்.-சுக்கு சென்றடைந்ததும் Crew-9 குழுவினர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பூமிக்கு திரும்புவர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து மார்ச் 19-ம் தேதி டிராகன் விண்கலம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் பூமிக்கு திரும்ப உள்ளனர். வானிலையை பொறுத்து தேதிகள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் சுமார் 9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் தங்கியிருப்பதால் பூமிக்கு திரும்பிய உடன் அவரால் நடக்க முடியாது. அவருக்கு பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படக்கூடும். 45 நாட்கள் முதல் சில மாதங்களுக்கு பிறகே அவரால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என சர்வதேச விண்வெளி ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications