டிரம்ப் வைத்த ட்விஸ்ட்.. அமெரிக்க குடியுரிமையே இருந்தாலும் பாதுகாப்பு இல்லை.. பொதுமக்கள் அச்சம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் இத்தனை காலம் அங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிராகவே நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இதற்கிடையே இப்போது அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுக்கு எதிராகவும் கூட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் டிரம்ப் அரசு இறங்கியுள்ளது. இதனால் அங்குப் பல லட்சம் பேர் அச்சத்தில் இருக்கிறார்கள்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் தொடர்ச்சியாக அங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த டிரம்ப், பிறகு சட்டப்பூர்வமாக நுழைந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார். அமெரிக்காவுக்கு விசா கிடைப்பதிலும் கூட கெடுபிடி இருந்தது.

குடியுரிமை பெற்றாலும் ரிஸ்க்
இந்தச் சூழலில் இப்போது டிரம்ப் அரசு அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. அதாவது அமெரிக்காவில் Naturalization என்ற ஒரு முறை இருக்கிறது. இதன் கீழ் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சில குறப்பிட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்தால் குடியுரிமை பெற முடியும். இதுவரை பல லட்சம் பேர் இந்த முறையில் குடியுரிமை பெற்றுள்ளனர். இவர்களுக்கு எதிராகத் தான் இப்போது டிரம்ப் அரசு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.
அகதிகளாக அமெரிக்காவில் நுழைந்த பலரும் கூட இந்த முறையில் குடியுரிமை பெற்றனர். ஒரு அமெரிக்கக் குடிமகனாக, பாதுகாப்பு கிடைக்கும் என்பதாலேயே அவர்கள் குடியுரிமை பெற்றனர். வாக்களிப்பது போன்ற உரிமைகளும் கிடைக்கும். இதுபோல குடியுரிமை பெற்ற பல லட்சம் பேர் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் அங்கு வாழ்ந்து வந்தனர்.
டிரம்ப் நடவடிக்கைகள்
ஆனால், இந்த நிலை தான் மாறுகிறது. டிரம்ப் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகளை மாற்றியமைத்து வருவதால் இந்த முறையில் குடியுரிமை பெற்றவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். தாங்களும் எங்கு நாடுகடத்தப்படுவோமா என்று பயப்படுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் அமெரிக்காவில் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்ட பிறகு, அதை இழக்க வேண்டுமோ என அஞ்சுகிறார்கள்.
இதனால் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை முழுமையாகத் தவிர்த்துவிட்டனராம். எங்கு வெளிநாட்டிற்குச் சென்றால் சிக்கல்களைச் சந்திக்க நேரிடுமோ என நினைத்து அஞ்சுகின்றனர். ஏனெனில், இதுபோல குடியுரிமை பெற்றவர்கள் வெளிநாடு சென்றுவிட்டு நாடு திரும்பும்போது அவர்களை அமெரிக்கக் குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் காரணமாகவே வெளிநாடு செல்ல யோசிக்கிறார்கள். இன்னும் சிலர் சொந்த நாட்டிற்குள் பயணிக்கவே யோசிக்கிறார்கள். எங்குப் பிரச்சனை வருமோ என நினைத்து உள்ளூரில் மட்டுமே பயணிக்கிறார்களாம்.
குடியுரிமை பறிப்பு?
இது ஏற்கனவே அமெரிக்கக் குடிமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக டிரம்ப் அரசு இன்னொரு திட்டத்தையும் போட்டு வருகிறதாம். அதாவது இந்த முறையில் குடியுரிமை பெற்றவர்கள் எதாவது குற்றங்கள் செய்திருந்தால் அல்லது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியிருந்தால் அவர்கள் குடியுரிமையை ரத்து செய்யவும் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.
டிரம்ப் மிரட்டல்
டிரம்ப் கூட இதற்கு ஆதரவாகவே இருப்பதாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியூயார்க் நகரத்தின் மேயராக தேர்வான சோஹ்ரன் மம்தானியின் குடியுரிமையைக் கூட ரத்து செய்து கறித்து டிரம்ப் அச்சுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. மம்தானியும் தனது இளமைப் பருவத்தில் Naturalization மூலமாகவே குடியுரிமை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அகதிகள் மட்டுமின்றி, அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக நுழைந்த வெளிநாட்டினர் யார் வேண்டுமானாலும் குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றி, குடியுரிமையைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதை முடிவுக்குக் கொண்டு வரவே டிரம்ப் அரசு இப்போது முயல்கிறது.












Click it and Unblock the Notifications