அதிகரிக்கும் கொரோனா பரவல்.. நியூயார்கில் அவசர நிலை பிரகடனம்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, பிரேசில், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த வைரஸ் அவ்வப்போது தனது உருவை மாற்றி கொண்டு ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் ஒவ்வொரு வகை வைரஸாக பரவி வருகிறது. இதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் தடுப்பூசி போடுகிறார்கள்.
இந்த நிலையில் நியூயார்க்கில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இல்லாத அளவுக்கு தொற்றானது பரவி வருகிறது. நாளொன்றுக்கு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் 300 பேர் அனுமதிக்கப்படுவார்கள். இதனால் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 15 வரை நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர நிலையால் நியூயார்க் மருத்துவமனையின் திறன் அதிகரிக்கும். அது போல் கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசிக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். தென்னாப்பிரிக்காவில் பரவும் புதிய உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸை கருத்தில் கொண்டு நியூயார்க் மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சல் இந்த அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.
ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள நாடுகள் தங்கள் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. இதே போல் செக் நாட்டிலும் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு மேல் இருப்பதால் அங்கும் 30 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அது போல் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சந்தைகளை மூடவும் பொது இடங்களில் மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்கள், ஹோட்டல்களை இரவு 10 மணிக்கு மூடவும் ஆணையிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications