டிரம்பை முட்டாளாக்கிய உக்ரைன்? அமெரிக்காவுக்கு தெரியாமலேயே இரவோடு இரவாக ரஷ்யாவில் புகுந்து தாக்குதல்
வாஷிங்டன்: ரஷ்யா மீது மிகப் பெரிய ஒரு தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது. சுமார் 400 கிமீ வரை ஊடுருவிச் சென்ற உக்ரைன் பல ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கிடையே இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு உக்ரைன் முன்கூட்டியே எந்தவொரு தகவலையும் சொல்லவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு தெரியாமலேயே உக்ரைன் இந்த பெரிய தாக்குதலை நடத்தி முடித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 2022ல் மோதல் வெடித்தது. இரு நாடுகளுக்கும் இடையே பல காலமாக மோதல் இருந்தாலும் கூட 2022 அக்டோபர் மாதம் திடீரென உக்ரைன் மீது ஒரு முழு வீச்சிலான தாக்குதலை ரஷ்யா ஆரம்பித்தது. இந்த போர் சில வாரங்களில் முடியும் என முதலில் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது ஆண்டுக் கணக்கில் தொடர்கிறது.

மிகப் பெரிய தாக்குதல்
இந்த ரஷ்யா உக்ரைன் மோதலால் அந்த இரு நாடுகள் மட்டுமில்லாமல் பல்வேறு தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர உலகின் பல்வேறு நாடுகளும் தீவிரமாக முயன்று வருகின்றன. இருப்பினும், எதற்கும் பலன் கிடைப்பது போலத் தெரியவில்லை. இந்தச் சூழலில் தான் திடீரென ரஷ்யாவில் உள்ள ஏர் பேஸ்களை குறிவைத்து உக்ரைன் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
எல்லையில் இருந்து 4000 கிமீ உள்ளே அமைந்துள்ள பகுதிகளையும் கூட குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்யாவின் ஐந்து ராணுவ தளங்களைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய இந்தத் தாக்குதலில் சுமார் 40 ரஷ்யப் போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் மோதலில் உக்ரைன் நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
டிரம்பிற்கு தெரியாது
இதில் விஷயம் என்னவென்றால் அமெரிக்காவுக்கு எந்தவொரு தகவலையும் அளிக்காமல் உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபரான டிரம்ப்பிற்கு இப்படியொரு தாக்குதல் நடக்கிறது என்பதே தெரியாதாம். பொதுவாகவே இதுபோல பெரிய தாக்குதல்கள் நடக்கும்போது அமெரிக்காவுக்குச் சம்பந்தப்பட்ட நாடுகள் தகவல் தெரிவிக்கும். காசா மீதான மேஜர் ஆபரேஷன்கள் குறித்து இஸ்ரேல் அமெரிக்காவுக்குச் சொல்லும். அதுபோல அமெரிக்கா உதவிகளைப் பெறும் பெரும்பாலான நாடுகள் எதாவது மேஜர் தாக்குதலை நடத்துவதாக இருந்தால் அமெரிக்காவிடம் தகவல் சொல்லிவிடும்.
காரணம் என்ன
ஆனால், உக்ரைன் இது தொடர்பாக அமெரிக்காவிடம் எந்தவொரு தகவலையும் முன்கூட்டியே பகிரவில்லையாம். டிரம்ப் மற்றும் அமெரிக்காவுக்குத் தகவல் தெரிவிக்காமலேயே ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபரான டிரம்ப் உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வரத் தீவிரமாக முயன்று வருகிறார். இந்த நேரத்தில் இப்படியொரு மேஜர் தாக்குதலை நடத்துவதாகச் சொன்னால் அதை டிரம்ப் தடுத்துவிடுவார் என்பதாலேயே உக்ரைன் இதைக் கூறியிருக்காது எனத் தெரிகிறது.
டிரம்ப் அதிருப்தி
ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் இரு நாடுகள் மீதும் அதிருப்தியில் இருக்கிறார். ரஷ்ய அதிபர் புதினும் சரி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சரி சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட மறுப்பதால் அவர் கடும் அதிருப்தியில் இருக்கிறார். சமீபத்தில் கூட வெள்ளை மாளிகையில் புதினை கையாள்வது உங்கள் நிர்வாகத்திற்குக் கடினமாக இருக்கிறதா எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் புதின் மட்டுமல்ல.. ஜெலன்ஸ்கியை கையாள்வது கூட கடினமாகவே இருப்பதாக அதிருப்தி தெரிவித்தார்.
அமெரிக்கா உக்ரைன்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீது அதிபர் டிரம்ப் பல முறை தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிபர் டிரம்ப் பதவியேற்ற சமயத்தில் ஜெலன்ஸ்கி நேரடியாக வெள்ளை மாளிகையில் வந்து அவரை சந்தித்தார். அப்போது ஜெலன்ஸ்கி உடன் டிரம்ப் வாக்குவாதத்தில் கூட ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் மோதலை முடிவுக்குக் கொண்டு வரத் தீவிரமாக முயலும் நிலையில், அவருக்குத் தெரியாமல் உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதால் இது பேசுபொருள் ஆகியுள்ளது.












Click it and Unblock the Notifications