கனடா விவகாரம்.. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு ஜெய்சங்கர் சொன்ன வார்த்தை
வாஷிங்டன்: கருத்து சுதந்திரம் குறித்து பிறரிடம் கற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் கொல்லப்பட்ட விவகாரத்தால் இந்தியா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெய்சங்கர் இவ்வாறு கூறினார்.
இந்தியா-கனடா இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், கனடாவில் வசித்து வந்த கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தான். கடந்த ஜூன் மாதம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த கொலைகளுக்கு பின்னணியில் இந்திய ஏஜெண்ட்களின் பங்கு இருப்பதாக கனடா குற்றம் சாட்டுகிறது.

இதனை இந்தியா முழுவதுமாக மறுத்தது. இந்தியாவுக்கு பங்கு இருக்கலாம் என்று கனடா சொல்கிறதே தவிர, அதற்கான ஆதாரங்களை இந்தியாவிடம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் மோதல் போக்கு ஏற்பட்டதையடுத்து, இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரக உயர் அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது. அதேபோல், கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியது. இவ்வாறாக ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரத்தால் இந்தியா - கனடா இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், கருத்து சுதந்திரம் குறித்து பிற நாடுகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர ஆண்டனி பிளின்கனை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர் கூறியதாவது:-
கருத்து சுதந்திரம் என்ன என்பது குறித்து பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் ஜனநாயக நாடு. கருத்து சுதந்திரம் என்பது வன்முறையை தூண்டும் வகையில் நீட்டிக்கப்படும் என்பதாக நாங்கள் கருதவில்லை. அது கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது கூட... அது கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது இல்லை.." என்றார்.
மேலும் கனடா இதுவரை நிஜ்ஜார் கொலை தொடர்பாக ஆவணங்களை பகிர்ந்து கொள்ளாதது குறித்து பேசிய ஜெய்சங்கர், குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதாவது தகவல்களை பகிர்ந்து கொள்ள அவர்கள் தயாராக இருந்தால் நாங்களும் வெளிப்படையாகவே இருக்கிறோம். ஆனால், அதை ஒரு தனித்த நிகழ்வாக பார்ப்பதை நாங்கள் விரும்பவில்லை. அது தெளிவான ஒரு பிம்பத்தையும் காட்டாது" என்றார்.












Click it and Unblock the Notifications