அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆபத்தான கட்டத்தில் கிம் உடல் நிலை? அமெரிக்க உளவுத்துறை திடுக் தகவல்
வாஷிங்டன்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உளவுத்துறை இந்த தகவல்களை கண்காணித்து வருவதாக, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கிம் ஜாங் உன் தாத்தாவின் பிறந்தநாள் ஏப்ரல் 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. வழக்கமாக இதில் கிம் பங்கேற்பார். ஆனால் இந்த ஆண்டு பிறந்த நாள் விழாவில் கிம் பங்கேற்கவில்லை.
இது கிம் உடல் நிலை பற்றிய ஊகங்களை எழுப்பியது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் ஒரு அரசு நடத்திய கூட்டத்தில் தோன்றினார். அப்போதுதான், மக்கள், கடைசியாக அவரை பொது நிகழ்வில் பார்த்தனர்.

அறுவை சிகிச்சை
மற்றொரு அமெரிக்க அதிகாரி சி.என்.என் ஊடகத்திடம் இதுகுறித்து பேசியபோது, கிம்மின் உடல்நலம் குறித்த செய்திகள் நம்பகமானவை, ஆனால் அதன் தீவிரத்தை மதிப்பிடுவதுதான் இப்போதைக்கு கடினம் என்று கூறினார்.ஆன்லைன் செய்தித்தாள் டெய்லி என்.கே, கிம் ஜாங் உன், ஏப்ரல் 12 ஆம் தேதி இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளாகியதாக கூறியுள்ளது. அந்த செய்தி தளத்தின்படி, "அதிகப்படியான புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் அதிக வேலைப் பழு" காரணமாக கிம் இருதய சிகிச்சைக்கு உள்ளானார். மேலும் இப்போது அவர் ஹியாங்சன் கவுண்டியில் உள்ள ஒரு வில்லாவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியுள்ளது.

டாக்டர் குழு
கிம்மின் நிலைமை மேம்பட்டுள்ளதாக உறுதி செய்த பிறகு, அவருக்கு சிகிச்சையளித்த பெரும்பாலான மருத்துவக் குழு ஏப்ரல் 19 அன்று தலைநகர் பியோங்யாங்கிற்குத் திரும்பியது. அவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே கிம்முடன் உள்ளனர் என்று அந்த செய்தித் தளம் மேலும் தெரிவித்துள்ளது.

உளவு கஷ்டம்
உண்மை நிலையை கண்டறிவது அமெரிக்க உளவுத்துறைக்கே கடினம். வட கொரியாவிலிருந்து உளவுத்துறையைச் சேகரிப்பது மிகவும் கடினம் ஏனெனில், கிட்டத்தட்ட கடவுளைப் போல கிம் அந்த நாட்டால் பார்க்கப்படுகிறார். கிம்மை சுற்றியுள்ள எந்தவொரு தகவலையும் கசியவிடாமல் வட கொரியா கடுமையாக கட்டுப்படுத்தி வைப்பது வழக்கம்.

வதந்திகள்
"கிம்மின் உடல்நலம் (புகைபிடித்தல், இதயம் மற்றும் மூளை) பற்றி சமீபத்தில் பல வதந்திகள் வந்துள்ளன. கிம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால்தான், ஏப்ரல் 15 கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை என சந்தேகம் வருகிறது" என்று மூத்த ஆராய்ச்சியாளரான புரூஸ் கிளிங்கர் கூறியுள்ளார். இவர் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனில் நிர்வாகி மற்றும் வட கொரியாவின் முன்னாள் சிஐஏ துணை பிரிவு தலைவர்.

காத்திருக்க வேண்டும்
"ஆனால், பல ஆண்டுகளாக, கிம் ஜாங்-உன் அல்லது அவரது தந்தை உடல்நிலை பற்றி பல வதந்திகள் வந்துள்ளன. நாம் காத்திருந்துதான் அதை உறுதி செய்ய வேண்டும்." என்று கூறினார் அவர். கிம் தனது நாட்டில் சர்வாதிகாரத்தை செலுத்தி வருவதாக விமர்சனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications