தேசத்திற்கு பெரும் அவமானம்... நாடாளுமன்ற கட்டிட தாக்குதல் குறித்து முன்னாள் அதிபர் ஒபாமா
வாஷிங்டன்:அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக பைடனை முறைப்படி தேர்ந்தெடுக்கும் நடைமுறை நேற்றிரவு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு எதிராக டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு பேரணி நடத்தவுள்ளதாக அறிவித்தனர். இதற்கு ஆதரவளித்த டிரம்ப், பேரணியில் பங்கேற்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை... ஐநா கவலை
மைக் பென்ஸ்
இந்நிலையில், எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களின் வெற்றியை உறுதி செய்யும் நிகழ்விலும் டிரம்பின் அறிவுறுத்தல்படி நடக்கப்போவதில்லை என்றும் அரசியலமைப்பு சாசனத்தின்படியே நடக்கப்போவதாகவும் துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவித்தார்.
அமெரிக்க கலவரம்
இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். நாடாளுமன்ற கட்டடத்தைத் தாக்கினர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.
பெரும் அவமானம்
இந்த நிகழ்விற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முன்னாள் அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வன்முறையை வரலாறு நினைவில் வைத்துக் கொள்ளும். சட்டப்பூர்வமான தேர்தலின் முடிவைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் அதிபரால் இந்த வன்முறை தூண்டப்பட்டுள்ளது. இது நமது தேசத்திற்கு பெரும் அவமானம்.
தூண்டப்பட்ட ஒரு வன்முறை
ஆனால் இந்தச் சம்பவம் யாரும் எதிர்பாராத ஆச்சரியமான தருணம் என்பதைப் போலப் பொய்யாக இதை நாம் பார்க்கிறோம். நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பெற்ற வெற்றி குறித்து கட்சி உறுப்பினர்கள் குடியரசு கட்சியும் சரி, அதன் ஆதரவு ஊடகங்களும் சரி உண்மையைச் சொல்ல விரும்பவில்லை. இதனால் ஏற்பட்ட விளைவுகளையே நாம் இப்போது காண்கிறோம். இது திட்டமிட்டு, தூண்டப்பட்ட ஒரு வன்முறை.
முடிவை எடுக்க வேண்டும்
இன்னும் சொல்லப்போனால், அது நெருக்கமான தேர்தல்கூட இல்லை. பைடனின் வெற்றி தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், அவர்கள் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வந்தனர். இதன் விளைவுகளை நாம் இப்போது பார்க்கிறோம். இப்போது, குடியரசுக் கட்சித் தலைவர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பலாம், வன்முறையைத் தூண்டலாம். அல்லது அவர்கள் யதார்த்தத்தைத் தேர்வு செய்து வன்முறையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கலாம்.
ஜார்ஜியா தேர்தல்
ஜார்ஜியா போன்ற மாநிலங்களில் குடியரசுக் கட்சியினரும் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளும் இதற்கு உதாரணங்கள். அவர்கள் மிரட்டல்களுக்கு அடிபணிய மறுத்து. தங்கள் கடமைகளை நிறைவேற்றியுள்ளனர். இதுபோன்ற இன்னும் அதிகமான தலைவர்கள் நமக்குத் தேவை.
ஆதரவு அளிக்க வேண்டும்
வரும் காலங்களில் நமது நாட்டை மீட்டெடுக்க பைடன் செயல்படுவார். இப்போதைய சூழ்நிலையில், வரும் நாட்களிலும், வாரங்களிலும், மாதங்களிலும். கட்சியைப் பொருட்படுத்தாமல், அவரை ஆதரிப்பதே அமெரிக்கர்களாகிய நமது முதல் கடமையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்,