அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த 'குட் ப்ரைடே' ஷாக்: மஜீத் டெக்னாலஜியால், வானில் சுருண்ட வார்ஹாக்
வாஷிங்டன்: கடந்த 24 மணிநேரத்தில் ஈரான் வான்பரப்பில் நடந்த அதிரடி தாக்குதல்கள், அமெரிக்காவின் வான் ஆதிக்க கனவை சிதைத்துள்ளன. 'குட் பிரைடே' அன்று ஈரானிய ராணுவம் நடத்திய துல்லியமான தாக்குதல்களில் அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

தப்பியவர்கள் யார்?
ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, முதல் அடியாக அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (Strike Eagle) ரக போர் விமானம் ஈரான் எல்லைக்குள் விழுந்தது. இதில் இரண்டு வீரர்கள் இருந்தனர்; ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரின் நிலை இன்னும் மர்மமாகவே உள்ளது.
சற்றும் எதிர்பாராத விதமாக, இரண்டாவது தாக்குதலில் A-10 வார்ஹாக் (Warthog) எனும் தரை இலக்குகளைத் தாக்கும் வலிமையான விமானம் வீழ்த்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதன் விமானி உயிர் தப்பினார். இவர்களைத் தேடிச் சென்ற இரண்டு HH-60W பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களும் ஈரானின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானாலும், சேதத்துடன் தளம் திரும்பின.
18,500 கோடி ரூபாய் இழப்பு!
பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 3 வரை நடந்து வரும் 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் ராணுவ இழப்புகள் தலைசுற்ற வைக்கின்றன. இந்த இழப்புகளின் மொத்த மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹18,596 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானின் 'மஜீத்' (Majid) மாயாஜாலம்!
அமெரிக்காவின் ஸ்டெல்த் (Stealth) தொழில்நுட்பத்தையே முறியடிக்க ஈரான் பயன்படுத்திய ஆயுதம் - மஜீத் ஏர் டிஃபன்ஸ் சிஸ்டம்.
ரேடார் இல்லா வேட்டை: இந்த சிஸ்டம் ரேடார் சிக்னல்களைப் பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக 'பேசிவ் இன்ஃப்ராரெட்' (Passive Infrared) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதனால் அமெரிக்க விமானங்களின் ரேடார் எச்சரிக்கை கருவிகளால் (RWR) இதை முன்கூட்டியே கண்டறிய முடியவில்லை.
துல்லியமான தாக்குதல்: 8 கி.மீ தூரம் மற்றும் 6 கி.மீ உயரம் வரை பாய்ந்து தாக்கும் வல்லமை கொண்டது. F-35 போன்ற விமானங்களின் எஞ்சின் வெப்பத்தை வைத்தே இது இலக்கைச் சரியாகத் தாக்குகிறது.
மறைந்து நின்று தாக்குதல்: ஈரான் இப்போது சுரங்கங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து 'ஷூட் அண்ட் ஸ்கூட்' (Shoot and Scoot) முறையில் தாக்குதல் நடத்துகிறது. அதாவது ஏவுகணையை ஏவிய அடுத்த நொடியே அந்த இடத்தை விட்டு மறைந்துவிடுவார்கள்.
டிரம்ப் அறிவிப்பிற்கு விழுந்த பலத்த அடி!
"எங்கள் விமானங்கள் டெஹ்ரானுக்கு மேலே தங்குதடையின்றி பறக்கின்றன" என்று கடந்த மார்ச் 24 அன்று அதிபர் டிரம்ப் பெருமையாகக் கூறியிருந்தார். ஆனால், சரியாக ஒரு வாரத்தில் ஈரான் அந்த பிம்பத்தை உடைத்துள்ளது.
தற்போது மாயமான அமெரிக்க விமானியைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஈரானிய அரசு பெரும் சன்மானம் அறிவித்துள்ளது. இது குறித்து அதிபர் டிரம்பிற்கு வெள்ளை மாளிகை விரிவான விளக்கங்களை அளித்துள்ளது. ஈரானின் இந்த 'அசிமெட்ரிக் வார்ஃபேர்' (Asymmetric Warfare) முறை, நவீன உலகப்போரின் போக்கையே மாற்றி எழுதியுள்ளது.












Click it and Unblock the Notifications