ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா
வாஷிங்டன்: நமது அண்டை நாடான பாகிஸ்தான் செய்துள்ள ஒரு காரியம் இப்போது அமெரிக்காவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது அமெரிக்காவுக்கே செல்லும் வகையில் ஒரு ஏவுகணையைப் பாகிஸ்தான் உருவாக்கி வருகிறதாம். பாகிஸ்தான் ஏன் இதுபோல செய்கிறது.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது மத்திய கிழக்கில் மோதல் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா முழுக்க முழுக்க இந்த மோதலில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த மோதலை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே அமெரிக்காவின் திட்டமாக இருக்கிறது. இதற்கிடையே சத்தமே இல்லாமல் பாகிஸ்தான் இப்போது ஒரு காரியத்தைச் செய்துள்ளது.

பாகிஸ்தான்
இப்போது பாகிஸ்தானிடம் இருக்கும் நீண்ட தூர ஏவுகணை என்றால் அது 'ஷாஹீன் 3' தான். இந்த ஏவுகணை 2,750 கி.மீ தூரம் வரை சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. அதாவது இந்தியாவின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேர் போன்ற தொலைதூரப் பகுதிகளைத் தாக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த ஏவுகணையை வடிவமைத்து உள்ளது. இந்த ஏவுகணைகளை ஈஸியாகவே இந்தியா காலி செய்துவிடும் என்பது தனிக்கதை.
அதேநேரம் 'ஷாஹீன் 3' ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) கிடையாது. ஒரு ஏவுகணையைக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்று அழைப்பதற்கு, அது குறைந்தது 5,500 கி.மீ தூரத்திற்கு மேல் பாயும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். இந்தச் சூழலில் தான் பாகிஸ்தான் திரைமறைவில் செய்யும் ஒரு காரியம் அமெரிக்காவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தூரம் 11,000 கி.மீ-க்கும் அதிகமாகும். இதை மையமாக வைத்தே பாகிஸ்தான் ஒரு ஏவுகணையை உருவாக்கி வருகிறது. இதைக் கண்டுபிடித்துள்ள அமெரிக்கா, பாகிஸ்தானையும் ரஷ்யா, சீனா, வட கொரியா, ஈரான் ஆகிய நாடுகளுடன் சேர்த்து, அமெரிக்காவைச் சென்றடையும் ஏவுகணைகளை உருவாக்கும் நாடாகப் பட்டியலிட்டுள்ளது. செனட் சபையில் அமெரிக்கத் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்டு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டத்தின் காலக்கெடு குறித்த விரிவான தகவல்களை அவர் வழங்கவில்லை என்றாலும், அமெரிக்க நிலப்பரப்பை அடையும் ஒரு நீண்ட தூர ஏவுகணையை உருவாக்கி நிலைநிறுத்தப் பாகிஸ்தானுக்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அதிகபட்சம் பத்தாண்டுகள் வரை ஆகலாம் என்று பெயர் குறிப்பிட்ட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் அந்நாட்டு ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
வினோத விளக்கம்
இது குறித்த தகவல் வெளியான போதிலும் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு மாறவில்லை. தனது அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் இந்தியாவை மட்டுமே இலக்காகக் கொண்டவை என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனாலும், அமெரிக்காவைச் சென்றடையும் வகையில் 11,000 கிமீ செல்லும் ஏவுகணைகளை உருவாக்குவது ஏன் என்பது தொடர்பாக விளக்கம் தரவில்லை.
கடந்த 2025 இல் இந்தியா நடத்திய 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஒரு ராணுவ ராக்கெட் படை கமேண்ட்டை (Army Rocket Force Command) உருவாக்கியதாக அறிவித்தது. இது மற்ற சிறிய நாடுகளின் தடுப்புத் திட்டங்களைப் போன்றதாகும் பாகிஸ்தானின் தற்போதைய ஆயுதக் கிடங்கே வழக்கமான தாக்குதலைத் தடுக்க போதுமானது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்பது இந்தியாவைக் குறிவைத்து இருக்காது எனக் கருதுகிறார்கள். அதன் தேவை வேறு ஒன்றாகவே இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்!
காரணம்
அதாவது இப்போது எப்படி அமெரிக்கா ஈரானைத் தாக்குகிறதோ.. அதேபோல எதிர்காலத்தில் தங்களின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் என்ன செய்வது என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு எழுந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே இந்த புதிய ஏவுகணையை உருவாக்கி வருகிறது. எதிர்காலத்தில் தங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பாகிஸ்தான் இதை உருவாக்குவதாக மூத்த ஆய்வாளர்களான விபின் நாரங் மற்றும் பிரணய் வட்டி ஆகியோர் குறிப்பிட்டனர்.
அமெரிக்காவை அடையும் வகையில் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைத் திட்டத்தை உருவாக்கி வருவதைப் பாகிஸ்தான் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. பாகிஸ்தானிடம் தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் வரம்புக்கு நெருக்கமான எந்த ஏவுகணையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications