அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றும் மோடி: ஆஹா.. இந்த பெருமையைப் பெறும் முதல் இந்திய பிரதமர் மோடிதானாம்!
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று உரையாற்ற உள்ளார் இந்திய பிரதமர் மோடி. இந்தியாவின் பிரதமர் ஒருவர் அமெரிக்க காங்கிரஸில் 2வது முறையாக உரையாற்றுவது இதுவே முதல்முறை.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் 20ஆம் தேதி காலை அமெரிக்காவிற்கு விமானம் மூலம் புறப்பட்டார். கடந்த 2014ல் பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து 7 முறை அமெரிக்கா சென்றுள்ள நிலையில், முதல்முறை அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார்.

ஜூன் 21ஆம் தேதியான நேற்று சர்வதேச யோகா தினத்தை ஒட்டி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இதுதவிர தொழிலதிபர்கள், இந்திய வம்சாவளியினர், பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் உள்ளிட்டோரை அமெரிக்காவில் சந்தித்துப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
இன்று வெள்ளை மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேச உள்ளார் பிரதமர் மோடி. அமெரிக்காவுக்கு வருகை தரும்போது, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க காங்கிரஸ் சமீபத்தில் அழைப்பு விடுத்தது. அதை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் இரண்டாவது முறை உரையாற்றும் வாய்ப்பை மோடி பெற்றிருக்கிறார். இவருக்கு முன்பு வின்ஸ்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா, பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட வெகு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் இரண்டு முறை உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, பிரதமர் மோடி அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். பிரதமர் மோடி அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஐந்தாவது இந்தியப் பிரதமர் ஆவார். முந்தைய காலங்களில் பிரதமர்களாக இருந்த மன்மோகன் சிங் (2005), அடல் பிஹாரி வாஜ்பாய் (2000), பி.வி. நரசிம்ம ராவ் (1994) மற்றும் ராஜீவ் காந்தி (1985) ஆகியோர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றியுள்ளனர்.
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து நாட்டிற்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். அங்கு 24, 25 ஆகிய தேதிகளில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். எகிப்து அதிபர் எல்சிசி உடனான பேச்சுவார்த்தையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications