சாதித்த ஸ்பேஸ் எக்ஸ்..விண்வெளி பயணத்தில் ரெக்கார்ட்..வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுற்றுலா விண்கலம்
வாஷிங்டன்: உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த குழுவினர், விண்வெளியில் பயணத்தை முடித்துக்கொண்டு பத்திரமாக பூமிக்கு திரும்பினர். புளோரிடா கடலில் அதிகாலை டிராகன் கேப்சூல் தரையிறங்கியது. விண்வெளி நடைபப்யணத்தை முடித்துக்கொண்டு ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.
கற்பனைக்கு எட்டாத விசித்திரங்கள் நிறைந்துள்ள விண்வெளியில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் நோக்கில் விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பூமியை போல வேறு கிரகங்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் உள்ளதா? என ஆராய்ச்சிகள் நீடித்து வருகிறது.

அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ, ரஷியா மற்றும் சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையங்களும் இத்தகைய ஆய்வுகளில் முன்னிலையில் உள்ளது. இது ஒருபக்கம் இருக்க விண்வெளியில் வணிக ரீதியிலான முயற்சியுடன் தனியார் நிறுவனமும் களம் இறங்கியிருக்கிறது. உலக பெரும் பணக்காரர் ஆன எலான் மஸ்க்கின் நிறுவனம், 'போலரிஸ் டாவன் மிஷன்' என்ற பெயரில் விண்வெளிக்குச் செல்ல விரும்புபவர்களை அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது.
இதற்காக அவர்களுக்கு உரிய பயிற்சியளித்து பூமியில் இருந்து 700 கிலோ மீட்டர் உயரத்தில் ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடைபயணத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி முதல் குழு கடந்த 10 ஆம் தேதி விண்வெளி பயணம் மேற்கொண்டது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் பெரும் கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், முன்னாள் விமானி ஸ்காட் போட்டிட், ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் என்ஜினியர்கள் அன்னா மேனன் , சாரா கில்லிஸ் ஆகியோர் சென்றனர்.
கடந்த 12 ஆம் தேதியில் விண்வெளிக்கு சென்ற இவர்கள் 4 பேரும் விண்வெளியில் ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடைபயணம் சென்றனர். பூமிக்கு மேலே 700 கிலோ மீட்டர் உயரத்தில் ஸ்பேஸ் வாக் செய்தனர். இது மட்டும் இன்றி பூமியின் சுற்றுப்பாதையில் பயணித்து பூமிக்கு மேல் 1,400 கிலோ மீட்டர் உயரம் வரை சென்றுள்ளனர். 5 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.
புளோரிடா கடலில் டிராகன் கேப்ஸூல் லேண்டிங் ஆனது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.42 மணிக்கு தரையிறங்கினர். இந்த நிகழ்வை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது. கமர்ஷியல் ரீதியிலான விண்வெளி பயணத்தில் இது ஒரு மைல் கல் என என நாசா கூறியிருக்கிறது.
இந்த விண்வெளி பயணத்தின் போது, விண்வெளியில் அதிநவீன மருத்துவ உபகணரங்களுடன் உடல்நிலையை கண்காணிப்பது, ஸ்டார்லிங்க் செயற்கை கோளுடன் தொடர்பு கொள்வது உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை இந்தக் குழுவினர் மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளுக்கு பிறகு எடுத்த தரவுகளுடன் பூமிக்கு வந்துள்ளனர். இந்த விண்வெளி பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், வரும் காலத்தில் விண்வெளி சுற்றுலா சூடுபிடிக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications