டிரம்ப் பதவியேற்பால் மருத்துவமனைகளுக்கு ஓடும் கர்ப்பிணிகள்! சிசேரியனுக்கு குவியும் முன்பதிவுகள்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்பின் குடியுரிமை காலக்கெடு உத்தரவால் தம்பதிகள் பலரும் பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என கருதி மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் கமலா ஹாரீஸும் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிட்டனர். கமலா, துணை அதிபராக இருந்தவர், டிரம்ப் அதிபராக இருந்தவர்.

இவர்கள் இருவருக்குள்ளும் கடுமையான போட்டி இருந்தது. இந்த நிலையில் இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளைவிட அதிக வாக்குகளை கைப்பற்றினார். இதையடுத்து அவர் அமெரிக்க அதிபராக தேர்வானார்.
அமெரிக்க சட்டத்திட்டங்களின் படி ஜனவரி மாதத்தில்தான் அதிபர் பதவியேற்க வேண்டும். அந்த வகையில் நவம்பர் மாத தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுவிட்டாலும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு 47 ஆவது அதிபராக பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடிகளை காட்டி வருகிறார். அவற்றில் முக்கியமானது பிறப்பால் அமெரிக்க குடியுரிமை கிடைப்பதற்கு விதிக்கப்பட்ட தடை ஆகும்.
அதாவது டிரம்ப் உத்தரவின்படி பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பிறகு பிறக்க போகும் குழந்தைகளுக்கு இனி அமெரிக்க குடியுரிமை கிடையாது என உத்தரவிட்டுள்ளார். இதனால் கர்ப்பமாக உள்ள தம்பதிகள் மருத்துவமனைகளுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள செல்கிறார்கள்.
அதாவது பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறுகிறார்கள். டெலிவரி தேதிக்குள் குழந்தை பிறக்க வேண்டும் என்றால் சிசேரியன்தான் செய்ய வேண்டும். எனவே தற்போது சிசேரியனுக்கு நாட்கள் குறிக்கப்பட்டு மருத்துவமனைகளில் முன்பதிவுகள் நடக்கின்றன.
பிப்ரவரி 19ஆம் தேதிக்கு பிறகு அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அமெரிக்க குடிமக்கள் ஆக முடியாது. இதனால் 8 மாதம், 9 மாத கர்ப்பிணிகள் மருத்துவர்களை சந்தித்து சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்துள்ளனர்.
அது போல் 7 மாத கர்ப்பிணிகள் கூட , சிசேரியன் செய்து குழந்தையை எடுத்துவிட்டால் எப்படியாவது இன்குபேட்டரில் வைத்தாவது வளர்த்துக் கொள்ளலாம் என கருதுகிறார்கள். அது போல் அமெரிக்க குடியுரிமை அல்லாத பெற்றோரிடம் கிரீன் கார்டு இல்லாவிட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அமெரிக்க குடியுரிமை கிடைக்காது. இதனால் கிரீன் கார்டு பெறவும் பலர் வரிசையில் காத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் எச்-1பி, எல் 1 உள்ளிட்ட தற்காலிக விசாக்களுடன் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். இனி அமெரிக்காவுக்கு பல்வேறு கனவுடன் செல்லும் வெளிநாட்டினர் டிரம்ப் உத்தரவால் முடிவை மாற்றிக் கொள்ளும் சூழல் நிலவுகிறது.
டிரம்ப் பதவியேற்றதும் பனாமா கால்வாயை மீட்பேன் என உறுதி பூண்டுள்ளார். அது போல் உக்ரைனுடனான போரை ரஷ்யா நிறுத்தாவிட்டால் அந்த நாட்டிற்கு அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்டு, பொருளாதார தடையும் விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும் ரஷ்ய அதிபர் புதினை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயார். உக்ரைன் விவகாரத்தில் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க வாய்ப்பிருக்கிறது. புதினுடன் விரைவில் பேசவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications