"உப்பு பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டுமாம்.." ஏன் தெரியுமா?.. WHO வெளியிட்ட முக்கிய தகவல்!
சோடியம் எனப்படும் உப்பின் அளவை 30 சதவீதம் குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என WHO தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: இன்னும் இரண்டு ஆண்டுகளில் மக்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் சோடியம் எனப்படும் உப்பின் அளவை 30 சதவீதம் குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நாம் சாப்பிடும் உணவுகளில் சுவையை அதிகரிப்பதில் உப்பிற்கு முக்கிய பங்கு உண்டு. இந்த உப்பில் முக்கிய மூலக்கூறாக சோடியம் உள்ளது.
நமது உடலில் உள்ள நீர்மசத்து திரவங்களில் சோடியமும் பொட்டாசியமும் முக்கியமான உட்பொருளாக உள்ளது. இந்த தாதுப்பொருட்கள் சமநிலையில் இருந்தால் மட்டுமே செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

ரத்த அழுத்தம் அதிகமாகும்
இந்த சோடியம் பெரும்பாலும் நமது உடலுக்கு தூள் உப்பு மூலமாகத்தான் செல்கிறது.
உடலில் உப்பு அதிகமானால் பல பிரச்சனைகள் ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகமாகும். பாதங்களில் நீர் சேர்ந்து வீக்கம் ஏற்படலாம். இதய நோய், பக்கவாதம் போன்றவையும் ஏற்படும். எனவே உப்பு பயன்பாட்டையும் கவனித்துக் கொள்ள வேண்டியது. உலக சுகாதார அமைப்பு ஒரு மனிதன் நாள் ஒன்றிற்கு சராசரியாக 5 கிராமிற்கும் குறைவான அளவில் உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

5 சதவிகித நாடுகள் மட்டுமே
ஆனால், ஒவ்வொரு நபரும் சராசரியாக அதைவிட இருமடங்கு உப்பை சேர்த்துக்கொள்தாக உலக சுகாதார் நிறுவன தரவுகள் கூறுகின்றன. எனவே உப்பு பயன்பாட்டை குறைப்பதை வலியுறுத்தி உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு மேலும் கூறுகையில், WHO-இல் உறுப்பு நாடுகளில் வெறும் 5 சதவிகித நாடுகள் மட்டுமே சோடியம் குறைப்புக் கொள்கையை கட்டாயமாக பின்பற்றி பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் 73 சதவிகித நாடுகள் இதனை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள்
சோடியத்தை குறைக்கும் கொள்கை முறையாக பின்பற்றப்பட்டால் 2030ஆம் ஆண்டுக்குள் 70 லட்சம் மக்களின் உயிர் காப்பாற்றப்படும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. தொற்றுநோய் அல்லாத நோய்களால் மக்கள் இறப்பதைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. உப்பு பயன்பாட்டை குறைப்பது தொடர்பாக பெரிய அளவில் மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதோடு உப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பாக பல்வேறு ஆவணங்களையும் உலக சுகாதார நிறுவனம் இணைத்து வெளியிட்டுள்ளது.

எதை எல்லாம் செய்யலாம்
உப்பு பயன்பாட்டை பொறுத்தவரை சாப்பிடும் போது மேஜையில் உப்பு ஜாடிகளை வைத்து சாப்பிடுவதை பழக்கமாக வைத்துக்கொள்ளக் கூடாது. உப்பு குறைவாக இருந்தாலும் கூட கூடுதல் உப்பு சேர்க்காமல் சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும். உப்பு அதிகம் சேர்க்கப்படும் ஊறுகாய் உள்ளிட்டவற்றை அளவோடு எடுத்துக்கொளலாம். அதேபோல், அதிக உப்பு சேர்க்கப்படும் பாக்கெட் உணவுகளை ஒதுக்கி விட வேண்டும். இத்தகைய பயன்பாட்டை கடைப்பிடிப்பதன் மூலம் உப்பு பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications