அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸ், இப்போது சர்வதேச ஆபரேஷன்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே 300 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவில் புதிய சுத்திகரிப்பு ஆலையை அமைக்க முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முடிவு செய்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.27 லட்சம் கோடியாகும். இது குறித்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனம் ரிலையன்ஸ்.. உலக நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி, அதைச் சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்வதே ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரதான ஆபரேஷன். இந்த ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது, இந்தியாவைத் தாண்டி தனது ஆபரேஷன்களை விரிவாக்கத் திட்டமிட்டு வருகிறது.

அமெரிக்காவில் ரிலையன்ஸ்
அதன் ஒரு பகுதியாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமெரிக்காவில் அமைக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது இதுவே முதல்முறையாகும். இந்த முதலீடு தொடர்பான அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்தார். டெக்சாஸின் பிரவுன்ஸ்வில் துறைமுகத்தில் உருவாகும் இந்த $300 பில்லியன் திட்டத்தை அவர் "வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்" என்றும், அமெரிக்க எரிசக்தி உற்பத்திக்கு ஒரு பெரிய ஊக்கம் அளிக்கும் திட்டம் என்றும் குறிப்பிட்டார்.
டிரம்ப் அறிவிப்பு
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "50 ஆண்டுகளில் முதல்முறையாக பிரவுன்ஸ்வில் அமெரிக்காவின் முதல் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை 'அமெரிக்கா ஃபர்ஸ்ட் ரிஃபைனிங்' நிறுவனம் அமைக்கிறது என்பதை அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன்.. இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முதலீடு உடன் இந்த ஆலை உருவாக்கப்படும். இந்த முதலீடு அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரியது. இந்த அசாத்தியமான முதலீட்டிற்காக இந்தியாவில் உள்ள எங்கள் பாட்னர்களுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி" என்று அவர் தெரிவித்தார்.
டிரம்ப் இதுபோன்ற அறிவிப்பைவெளியிட்டாலும் கூட இதுவரை ரிலையன்ஸ் தரப்பில் இருந்து இதை உறுதி செய்யவில்லை. இருப்பினும், இது கிட்டத்தட்ட உறுதியான முதலீடு தான் என்றும் சீக்கிரமே இந்த முதலீடு தொடர்பான அறிவிப்பை ரிலையன்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்றும் தெரிகிறது.
அமெரிக்க ஆலை
அமெரிக்காவின் கடற்கரையின் ஒரு முக்கியக் கப்பல் போக்குவரத்து மையமான பிரவுன்ஸ்வில் துறைமுகத்திலேயே இந்த சுத்திகரிப்பு ஆலை அமையவுள்ளது. இது அமெரிக்கச் சந்தைகளுக்கு எரிபொருளை வழங்குவதுடன், அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றுமதியும் செய்யும். மேலும், இந்த சுத்திகரிப்பு ஆலை சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் மிகத் தூய்மையான சுத்திகரிப்பு ஆலையாகச் செயல்படும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
வளர்ச்சியைக் கொடுக்கும்
மேலும், இந்த திட்டம் தென் டெக்சாஸில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் டிரம்ப் கூறினார். மேலும், அப்பகுதிக்குக் குறிப்பிடத்தக்கப் பொருளாதார செயல்பாடுகளைக் கொண்டுவரும். இது உலகளாவிய ஏற்றுமதியைச் செழுமைப்படுத்துவதோடு, நீண்டகாலமாகப் பின்தங்கியிருந்த இப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் வளர்ச்சியையும் கொண்டுவரும்" என்று அவர் தெரிவித்தார்..
இந்த பகுதியில் இதற்கு முன்பும் கூட சுத்திகரிப்பை ஆலையை அமைக்க முயற்சிகள் நடந்தன. இருப்பினும், சில பல காரணங்களால், குறிப்பாகச் செலவு அதிகரிப்பால், அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. இந்தச் சூழலில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த பெரிய முதலீட்டைச் செய்யவிருக்கிறது.












Click it and Unblock the Notifications