'21ஆம் நூற்றாண்டின் போரின் தொடக்கம்..' சர்வதேச போரை தொடங்கிவைத்த இரட்டை கோபுர தாக்குதல்:என்ன நடந்தது
வாஷிங்டன்: சரியாக 20 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்டது. 21ஆம் நூற்றாண்டில் மோசமான தாக்குதல்களில் ஒன்றான இது, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பயங்கரவாதிகள் குறித்த எச்சரிக்கை மணியை அடித்தது என்றால் மிகையாகது.
Recommended Video
வலிமையான ராணுவத்தைக் கொண்ட நாடு, பாதுகாப்புத் துறைக்கு மட்டும் பல மில்லியன் டாலர்களைச் செலவிடும் நாடு அமெரிக்கா. அப்படிப்பட்ட நாட்டின் மீது பயங்கரவாதிகள் இப்படியொரு மோசமான தாக்குதலை நடத்துவார்கள் என யாருமே அதுநாள் வரை கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
செப்டம்பர் 11ஆம் தேதி 2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், பல்வேறு வகைகளில் அமெரிக்க வரலாற்றை ஏன் உலக வரலாற்றைக் கூட மாற்றியமைத்தது எனக் கூறலாம். அமெரிக்காவின் மிக நீண்ட போரான ஆப்கன் போர், ஈராக் போர் ஆகியவற்றுக்கு வித்திட்டது இந்த தாக்குதல் தான்.

9/11 தாக்குதல்
இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் தான், ஆப்கனிலுள்ள பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. 2001ஆம் ஆண்டு அமெரிக்கா தொடுத்த போர், 20 ஆண்டுகள் நீண்டது. ஜார்ஜ் புஷ், ஒபாமா, டிரம்ப், பைடன் என நான்கு அதிபர்களைப் பார்த்த இந்த போர் இப்போது தான் முடிந்துள்ளது, அதுவும் அமெரிக்கா விரும்பியபடி அல்ல. அதேபோல ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் என்பது புஷுக்கு மிகப் பெரிய அவப்பெயர் பெற்றுத் தந்தது. மேலும், சர்வதேச அளவில் இஸ்லாமியர்கள் மீதும் இஸ்லாமிய நாடுகள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாக ஒசாமா பின்லேடன் முன்னெடுத்த பரப்புரை குறிப்பிட்ட அளவு வெற்றியும் பெற்றது.

அதிக விளைவை ஏற்படுத்திய தாக்குதல்
சர்வதேச அளவில் அதிக விளைவுகளை ஏற்படுத்திய பயங்கரவாத தாக்குதல் என்றால் அது இரட்டை கோபுர தாக்குதல் தான். 2001, செப்.11ஆம் தேதி காலை 8.46 மணிக்கு இரட்டை கோபுரத்தின் வடக்கு டவரில் முதல் விமானம் மோதியது. அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் 9.03 மணிக்கு கிழக்கு இரண்டாவது விமானம் தெற்கு டவரில் மோதியது. இதனால் இரட்டை கோபுர கட்டிடம் பலவீனமடைய இரண்டு கட்டிடங்களும் சில நிமிடங்களில் சீட்டுக்கட்டு போலச் சரிந்தது.

முதல் தாக்குதல் இல்லை
இரட்டை கோபுரத்தைத் தரைமட்டமாக்க வேண்டும் என்ற திட்டம் பல ஆண்டுகளாகவே பயங்கரவாதிகளுக்கு இருந்தது. 1993இல் முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கும் அல்கொய்தாவுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் பின்லேடனின் ஆன்மீீக குருவாக கருதப்படும் Blind shake எனப்படும் ஷேக் உமர் அப்துல்- ரஹ்மான் என்பவரைப் பின்தொடரும் பயங்கரவாதிகளே இதை நடத்தியிருந்தனர். இதுபோகவும் பல தாக்குதல் திட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

சிஐஏ
வரிசையாக பல்வேறு சமிக்கைகள் இருந்தும் இரட்டை கோபுர தாக்குதலைத் தடுக்க அமெரிக்கா தவறிவிட்டது என்றால் அது உலக வல்லரசுக்கு மிகப் பெரிய அவமானம் தான். அதிலும் 1996 முதலே அமெரிக்கா மீது தாக்குதலை நடத்தவுள்ளதாக ஒசாமா பின்லேடன் வெளிப்படையாகவே அறிவித்து வந்தார். இந்த தாக்குதலுக்குப் பல மாதங்களாக பின்லேடன் திட்டமிட்டு வந்தார். இந்த தாக்குதலை நடத்தவுள்ளவர்களை பின்லேடனே நேரடியாகத் தேர்வு செய்தார். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுடன் மலேசியாவில் மீட்டிங்கும் நடந்தது. இது குறித்த தகவல்கள் அமெரிக்காவின் சிஐஏ-க்கு கிடைத்தது.

என்ன காரணம்
குறிப்பாக 2000 முதலே அமெரிக்காவில் பெரிய தாக்குதலை நடத்த பின்லேடன் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த சமயத்தில் சிஐஏ, எஃபிஐ போன்ற புலானாய்வு குழுக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பும் ஒருங்கிணைந்து வேலை பார்க்கும் திறனும் இல்லாமல் இருந்தது. இதனால் சரியான நேரத்தில் எப்.பி.ஐ அமைப்பை சிஐஏ அலர்ட் செய்யவில்லை. 2000ஆவது ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற ஆண்டு. எனவே அந்த சமயத்தில் அதிபராக இருந்த பில் கிளின்டனுக்கும் அவரது ஊழியருக்கும் இருந்த ரகசிய உறவு குறித்த செய்திகளை வெளியிடவே பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. இதனால் செய்தி நிறுவனங்களும் இந்த பக்கமே வரவில்லை. இதனால் தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவிலேயே தங்கி, விமானத்தை ஓட்டும் பயிற்சி எடுத்து, தாக்குதலையும் நடத்த முடிந்தது.

அதிபர் புஷ்
சரி, இந்த தாக்குதல் உலக வரலாற்றை எப்படி மாற்றியது என்பதைப் பார்க்கலாம். அன்று தாக்குதல் நடந்த போது காலை 8.30 மணியளவில் அதிபர் புஷ், புளோரிடாவில் உள்ள எம்மா இ புக்கர் பள்ளியில் மாணவர்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். சரியாக நிகழ்ச்சி தொடங்கும் முன் ஒரு அதிகாரி புஷ்ஷிடம் வந்து, " ஒரு சிறு விமானம் இரட்டை கோபுரம் மீது தவறுதலாக மோதியுள்ளது" என்றார். அப்போது அங்கிருந்த அனைவருமே இதை விபத்து என்றே கருதினர்.

America is under attack
நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரண்டு தாக்குதல் குறித்து தகவல் அங்கிருந்த அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளது. அப்போது வெள்ளை மாளிகை முதன்மை அதிகாரி ஆண்ட்ரூ கார்டு அதிபர் புஷ்ஷிடம் சென்று, "இரண்டாம் விமானம் மற்றொரு டவரை தாக்கியுள்ளது. America is under attack" என்று கூறியுள்ளார். அப்போதே அதிபர் புஷ்ஷின் முகம் மாற தொடங்கியது. இவை அனைத்தும் எம்மா இ புக்கர் பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோவில் தெளிவாகப் பதிவாகியிருக்கும்.

போர் அறிவிப்பு
இதையடுத்து அதிபர் புஷ் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்து பென்டகன் தாக்குதல், நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் மோதியது என வரிசையாக மோசமாகச் செய்திகள் வந்தன. இதையடுத்து சில நாட்களுக்கு அமெரிக்காவில் விமானச் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் பின்லேடன் என்பதும் அவர் ஆப்கனில் பதுங்கியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இரட்டை கோபுர தாக்குதல் நடந்து சரியாக 12ஆவது நாள், அதாவது செப்.23ஆம் தேதி இரட்டை கோபுர தாக்குதலுக்கு எதிராகப் பயங்கரவாதிகளின் மீதான போரை அறிவித்தார் புஷ்.

20 ஆண்டுகள்
இந்த தாக்குதலுக்கும் அப்போது ஆட்சியில் இருந்த தாலிபான்களுக்கும் எந்த வித நேரடி தொடர்பும் இல்லை என்றாலும், அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்ததால் தாலிபான்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அப்போது தொடங்கிய இந்த போர், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் முடிந்துள்ளது. இப்போது மீண்டும் தாலிபன்களே ஆட்சிக்கு வந்துள்ளதும் தனிக்கதை.

புதிய சட்டங்கள்
அதேநேரம் இந்த இரட்டை கோபுர தாக்குதல் அமெரிக்காவில் சில முக்கிய சட்டங்களுக்கு வழி வகுத்தது. சொந்த நாட்டு மக்களையே அமெரிக்க அரசு உளவு பார்க்க அனுமதிக்கும் Patriot Act இதன் பின்னரே நிறைவேறியது. குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் எனக் கருதப்படும் யார் மீதும், எந்த நாட்டின் மீதும். எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு வழக்கும் Authorization for Use of Military Force of 2001 சட்டமும் நிறைவேற்றப்பட்டது இந்த சமயத்தில் தான்.

சர்வதேச நாடுகள்
இந்த சட்டத்தைப் பயன்படுத்தித் தான் சதாம் உசேன் அதிபராக இருந்த ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து. சதாம் உசேனிடமும் பயங்கர ஆயுதம் இருப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையிலும், ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டது. இது புஷுக்கு மிகப் பெரிய அவப்பெயரைப் பெற்றுத் தந்தது. மேலும், இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தான் ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா, ஏமன், ஜிபூட்டி, கென்யா, எத்தியோப்பியா, எரித்ரியா, சோமாலியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா ராணுவம் அனுப்பப்பட்டன. இதை வைத்தே சர்வதேச அளவில் இஸ்லாமியர்கள் மீதும் இஸ்லாமிய நாடுகள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாக ஒசாமா பின்லேடனால் வெற்றிகரமாகப் பரப்புரை முன்னெடுக்க முடிந்தது.

face of war of 21st century
செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெற்ற அன்று அதிபர் புஷ் கூறிய வாசகம் முக்கியமானது. தாக்குதலுக்குப் பிறகு, அதிபரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டவுடன் அவர் விமானத்தில் வாஷிங்டன் திரும்பினார். அப்போது பென்டகனில் இருந்து வந்த கரும் புகை மூட்டத்தைக் கண்ட அதிபர் புஷ், "That's the face of war of 21st century" (இது தான் 21ஆம் நூற்றாண்டின் போரின் தொடக்கம்) என்று தன்னுடன் பயணித்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். அது தான் 100% உண்மை. 'போரை ஒருவரால் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம், ஆனால் யாராலும் முடிக்க முடியாது' என்ற புகழ் பெற்ற வாசகம் உள்ளது. அதே தான் இப்போதும் நடந்துள்ளது. அன்று தொடங்கிய போர் இன்னும் சர்வதேச அளவில் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.
-
ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா! அலறும் இஸ்ரேல்! ட்ரம்புக்கு வந்த அவசர போன்! மிடில் ஈஸ்ட் ‘திக் திக்’ -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
37வது அலை தாக்குதலை தொடங்கிய ஈரான்.. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. சிக்கலில் இஸ்ரேல்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு.. சென்னையில் நிலைமை எப்படி இருக்கு? ஹோட்டல்கள் மூடப்படுமா? பின்னணி -
"ஈரான் போர் சீக்கிரமே முடிந்துவிடும்.." டிரம்ப் சொன்ன வார்த்தை.. ஆனால் அடுத்த வரியிலேயே ட்விஸ்ட் -
மொத்த மானமும் கப்பல் ஏறிடுச்சு.. எப்ஸ்டீனுடன் டைட்டானிக் போஸ் கொடுத்த டிரம்ப்! மர்ம நபர்கள் சம்பவம்! -
இன்னையோட முடிஞ்சுது! ஈரான் மீது பெரிய தாக்குதல் நடத்த முடிவு? மோசமான நாளாக இருக்கும்! அமெரிக்கா எச்சரிக்கை -
அமெரிக்காவால் 1970க்கு பிறகு உலகம் சந்திக்கும் கடுமையான நெருக்கடி! எச்சரித்த வால் ஸ்ட்ரீட் ஜர்னல்! -
நீ வேணா வந்து பாரு..1 லிட்டர கூட எடுத்துட்டு போக முடியாது! அமெரிக்காவுக்கு சவால் விட்ட ஈரான்! போச்சு -
ஈரானை தொட்டிருக்கக் கூடாது.. உலக நாடுகளின் ஃப்யூஸை பிடிங்கிட்டாங்களே! கதிகலங்க வைத்த கச்சா எண்ணெய் -
வெனிசுலாவிலிருந்து.. அமெரிக்காவுக்கு வந்த தங்க கட்டிகள்! மொத்த மதிப்பு பல நூறு கோடிகள்!












Click it and Unblock the Notifications