வெளியே முறைத்துக் கொண்டு.. உள்ளே தாலிபான்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா.. பரபர தகவல்
வாஷிங்டன்: ராணுவ புரட்சி மூலம் ஆப்கன் அரசை கவிழ்ந்த தாலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிபர் பைடன் எடுத்துள்ள நிலையில், அந்நாட்டின் சிஐஏ தலைவர் தாலிபான்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிவிட்ட போதிலும் அங்கு இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. ஆப்கனில் இருந்து வெளியேறப் பல்லாயிரக் கணக்கான மக்கள் காபூல் தலைநகரை முற்றுகையிட்டு வருகின்றனர்.
அதேபோல அங்கிருக்கும் தங்கள் நாட்டு மக்களைத் தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளிலும் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இதற்காகத் தலைநகர் காபூல் மட்டும் இன்னும் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

தாலிபான்கள்
சீனா, ரஷ்யா என உலகின் பல்வேறு நாடுகளும் தாலிபான்களை அங்கீகரித்துள்ள போதிலும், அமெரிக்கா தாலிபான்களை ஆதரித்து இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அமைதி பேச்சுவார்த்தையை விட்டுவிட்டு ஆயுதப் புரட்சி மூலம் ஆப்கன் அரசை கவிழ்த்த தாலிபான்களுக்கு எதிராகவே அமெரிக்க அதிபர் பைடன் கருத்து தெரிவித்து வருகிறார். மறுபுறம் தாலிபான்களும் அறிவித்தபடி ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேறவில்லை என்றால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

ரகசிய ஆலோசனை
இந்தச் சூழலில் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏ அமைப்பின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் தாலிபானின் நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதரை நேற்று தலைநகர் காபூலில் சந்தித்து ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மட்டும் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய பிறகு தாலிபான்களுடன் பைடன் நிர்வாகம் நடத்தும் முக்கிய ஆலோசனையாக இது இருக்கும்.

சிஐஏ
அதேநேரம் இந்த தகவலை சிஐஏ செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தவில்லை. சிபிஐ இயக்குநரின் பயணத் திட்டங்கள் குறித்து தகவல்களை என்றும் பகிர்ந்து கொண்டதில்லை என மறுத்துவிட்டார். அதேநேரம் சிஐஏ அமைப்பின் முக்கிய உயர் அதிகாரி இந்த தகவலைத் தெரிவித்ததாக வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம், இந்த ரகசிய கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை வாஷிங்டன் போஸ்ட் வெளியிடவில்லை.

என்ன ஆலோசனை
ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என வாஷிங்டன் போஸ்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. ஆனால், இதுவரை இதற்குத் தாலிபான்கள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. காணொலி மூலமாக இன்று நடைபெறும் ஜி7 மாநாட்டில் ஆப்கன் விவகாரம் ஆலோசிக்கப்படவுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "கனடா ஏற்கனவே நீண்ட காலமாகவே தாலிபான்களைப் பயங்கரவாதிகளாகவே அறிவித்துள்ளது. அதனால்தான் அவர்கள் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளனர். எனவே, அடுத்தகட்டமாக அவர்கள் மீது விதிக்கப்பட வேண்டிய பொருளாதாரத் தடைகள் குறித்து முடிவெடுக்கலாம். இது குறித்து ஜி7 மாநாட்டில் ஆலோசித்து தேவையான முடிவு எடுக்கப்படும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications