ஓரங்கட்டப்படும் இந்தியா? உள்ளே வரும் பாகிஸ்தான்.. அமெரிக்கா சொன்ன மிக முக்கிய தகவல்.. அடுத்து என்ன
வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையேயான உறவுகள் கடந்த சில காலமாகப் பாதிக்கப்படும் நிலையில், மறுபுறம் அமெரிக்கா பாகிஸ்தான் உறவு சீராகி வருகிறது. இது புவிசார் அரசியலை மொத்தமாக மாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் உடன் மேம்படும் உறவு குறித்தும், இந்தியாவை இது எப்படிப் பாதிக்கும் என்பது தொடர்பாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்கா பாகிஸ்தான் நாடுகள் கடந்த சில மாதங்களாகவே நெருக்கம் காட்டி வருகிறது. அதேநேரம் இந்தியா அமெரிக்கா உறவு கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது.

மார்கோ ரூபியோ
இதற்கிடையே இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். அதாவது அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவுகளை மேம்படுத்த அமெரிக்கா ஆர்வமாக இருந்தாலும், அது இந்தியாவுடனான அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவைப் பாதிக்காது என்று மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஆசியன் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரூபியோ இப்போது கோலாலம்பூரில் இருக்கிறார். இந்த உச்ச மாநாட்டிற்குப் பிறகு அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தனியாகச் சந்தித்து ஆலோசிக்க உள்ளார். இந்தச் சந்திப்புக்கு முன்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரூபியோ, இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு ஆழமான, வரலாற்றுச் சிறப்புமிக்க, முக்கியமான நட்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்கா சொல்வது என்ன
அமெரிக்கா பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்பட்டு வரும் நிலையில், இந்தியாவுடன் அமெரிக்காவுக்குப் பழையபடி உறவு இருக்காது எனத் தகவல்கள் வெளியான நிலையில், ரூபியோவின் இந்தக் கருத்து வந்துள்ளது. இது தொடர்பாக ரூபியோ மேலும் கூறுகையில், "இந்தியா கவலைப்படுவதற்குத் தெளிவான காரணங்கள் உள்ளன. ஆனால் பாகிஸ்தான் உடனான எங்கள் உறவு எந்த விதத்திலும் இந்தியாவுடனான உறவுகளைப் பாதிக்காது" என்று விளக்கினார்.
இந்தியாவைத் தூதரக ரீதியாக மிகவும் முதிர்ச்சியான நாடு எனக் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் நல்லுறவுகளைப் பேண வேண்டி இருப்பதாக வலியுறுத்தினார்.
அமெரிக்கா பாகிஸ்தான் உறவு
கடந்த ஆறு மாதங்களாக அமெரிக்கா- பாகிஸ்தான் இடையேயான உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரை நேரடியாக வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சந்தித்துப் பேசியிருந்தார்.
மேலும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரை, வரி மூலம் அழுத்தம் கொடுத்து நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். இதை இந்தியா பல முறை மறுத்தாலும் டிரம்ப் தொடர்ந்து அதைக் கூறி வருகிறார். ஆனால், மறுபுறம் பாகிஸ்தான் டிரம்ப் சொல்வதே சரி எனத் தலையை ஆட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய கச்சா எண்ணெய்
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து ரூபியோ பேசுகையில், "கச்சா எண்ணெய்யைப் பல்வேறு தரப்பிடம் இருந்தும் வாங்க இருப்பதாக இந்தியா ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளது. அதாவது ஒரு நாட்டிடம் இருந்து மட்டும் கச்சா எண்ணெய்யை வாங்காமல் பல நாடுகளிடம் இருந்து வாங்கவுள்ளனர். அவர்கள் தங்கள் கச்சா எண்ணெய் கொள்முதலை இப்படி பலரிடம் இருந்து வாங்கும்போது குறிப்பிட்ட நாட்டிடம் இருந்து குறைவாக மட்டும் வாங்குவார்கள்" என்றார்.
மேலும், இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வரும் நிலையில், அது சீக்கிரமே இறுதியாகலாம் எனச் சொல்லப்பட்டு வருகிறது. இது தொடர்பான கேள்விக்கும் ரூபியோ பதிலளித்தார். அதாவது வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து இப்போது தான் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என மட்டும் சொல்லி முடித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications