யூ-டர்ன் மேல் யூ-டர்ன் போட்ட டிரம்ப்.. ஒரு வாரத்தில் இப்படி பேக் அடிச்சிட்டாரே.. சீனாவுக்கு ஜாக்பாட்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த வாரம் ரெசிப்ரோக்கல் வரி என்று உலக நாடுகள் மீது ஏகப்பட்ட வரிகளை அறிவித்திருந்தார். இதற்கிடையே இந்த வாரமே அவர் யூடர்ன் மேல் யூடர்ன் போட்டு வருகிறார். ஏற்கனவே ரெசிப்ரோக்கல் வரியை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்த நிலையில், இப்போது சீனாவுக்கு சாதகமான ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் என்றைக்கு பதவியேற்றாரோ அன்று முதலே அவர் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார். அமெரிக்காவில் அவர் ஏற்படுத்தும் குழப்பங்கள் சர்வதேச அளவில் எதிரொலிப்பதாக இருக்கிறது. உலக பொருளாதாரத்தையும் கூட கடுமையாக பாதிக்கிறது.

ரெசிப்ரோக்கல் வரி
டிரம்ப் கடந்த வாரம் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். அதாவது உலக நாடுகள் அமெரிக்கா மீது எவ்வளவு வரி விதிக்கிறதோ.. அதற்கு பதிலடியாக அமெரிக்காவும் வரிகளை விதிக்கும் என அறிவித்த டிரம்ப், இது தொடர்பான லிஸ்ட்டை வெளியிட்டிருந்தார். அதில் 10% முதல் 50% வரை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வரிகள் விதிக்கப்பட்டு இருந்தன.
டிரம்பின் இந்த வரிகள் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட வணிக போரை உருவாக்கும் ஆபத்தை ஏற்படுத்தியது. உலகின் பல்வேறு நாடுகளும் டிரம்ப் வரிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், சில நாடுகள் மட்டும் பதிலடியாக வரிகளை அறிவித்தன. அதில் முக்கியமானது சீனா. அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரிகளை விதிப்பதாக சீனா அறிவித்தது.
டிரம்ப் யூடர்ன்
மற்றொருபுறம் வீர ஆவேசமாக வரிகளை அறிவித்த டிரம்ப், அதன் பிறகு யூடர்ன் மேல் யூடர்னாக போட்டு வருகிறார். கடந்த வாரம் ரெசிப்ரோக்கல் வரிகளை அறிவித்த டிரம்ப், இந்த வாரம் அந்த வரிகளை 90 நாட்கள் வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதேநேரம் சீனா மீதான வரிகளை 145%ஆக உயர்த்துவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே இப்போது அவர் மற்றொரு யூடர்ன் போட்டுள்ளார். அதாவது திடீரென ஸ்மார்ட்போன்கள், கணினிகள் உள்ளிட்ட பிற மின்னணு சாதனங்கள் ஆகியவற்றுக்கு ரெசிப்ரோக்கல் வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது சீனாவுக்கு மிக பெரிய ஒரு பாசிட்டிவான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சீனாவில் இருந்து எலக்ட்ரிக் பொருட்கள் தான் அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகிறது.
விலக்கு அளித்த டிரம்ப்
அமெரிக்க சுங்க பாதுகாப்பு துறை அலுவலகம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதில் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் உட்பட மின்னணு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல செமி கண்டெக்டர் மீதான வரிகளும் விலக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அடிப்படை வரியாக டிரம்ப் அனைத்து நாடுகள் மீதும் 10% வரியை அறிவித்திருந்த நிலையில், அதில் இருந்தும் செமி கண்டெக்டர்களுக்கு டிரம்ப் விலக்கு அளித்துள்ளார்.
சீனாவுக்கு ஜாக்பாட்
அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் கூட எலக்ட்ரிக் பொருட்களே முதன்மையாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது எலக்ட்ரிக் பொருட்களுக்கும் வரி விலக்கு அளிப்பதாக சொல்லி மீண்டும் யூடர்ன் போட்டுள்ளார் டிரம்ப். வரும் காலங்களில் டிரம்ப் மேலும் பல விஷயங்களுக்கு இதேபோல வரி விலக்கு அளிக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் ஆலையை தொடங்கி அங்குள்ளவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே டிரம்ப் வரிகளை அறிவித்திருந்தார். இருப்பினும், அப்படி செய்வது செலவுகளை அதிகரிக்கவே செய்யும். இதன் மூலம் பல்வேறு பொருட்களின் விலை உயரும் ஆபத்து இருக்கிறது. இதன் காரணமாகவே பல டாப் நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் ஆலைகளை தொடங்க தயக்கம் காட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications