அமெரிக்காவிலும் இதே பிரச்சனை தான்! 24 அதிகாரிகளை குதறிய பைடனின் நாய்! சுட்டு கொல்ல சொன்ன கவர்னர்
வாஷிங்டன்: நமது நாட்டில் தான் நாய்க் கடி பிரச்சினை இருக்கிறது என நினைத்துவிடாதீர்கள்.. அமெரிக்காவிலும் அதுவும் வெள்ளை மாளிகையிலும் இதே பிரச்சினை இருக்கிறது. இதை வைத்து அங்கு மிகப் பெரிய அரசியலே நடக்கிறது.. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சென்னையில் சமீபத்தில் 5 வயது சிறுமி ஒருவரை ராட்வீலர் வகை நாய் கடித்துக் குதறியது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால், ஏதோ நாய்க் கடி பிரச்சினை நமது நாட்டில் மட்டுமே நடக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள்... அமெரிக்காவிலும் இதே பிரச்சினை தான்..
24 பேர்: அமெரிக்க அதிபர் பைடன் ஆசையாக ஒரு நாயை வளர்த்து வருகிறார். இது ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய். இதன் பெயர் கமாண்டர் பைடன். இந்த நாய் அமெரிக்க சீக்ரெட் சர்வீஸில் பணிபுரியும் 24 பேரை இந்த நாய் கடித்துள்ளதாம். சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் மட்டும் 24 பேரைக் கடித்துள்ளது. இது தவிர மேலும் பல வெள்ளை மாளிகை ஊழியர்களை இது கடித்து இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
இந்த கமாண்டரின் நாய் கடிகள் அமெரிக்க சீக்ரெட் அதிகாரிகளுக்குத் தலைவலியாக மாறியுள்ளது. இப்படித் தொடர்ந்து பலரும் கடிப்பதால் இந்த நாய் இருந்தால் அதிபரின் பாதுகாப்பு முறைகளையே மாற்ற வேண்டி இருந்ததாகக் கூறுகிறார். நாய்க்கு அருகே செல்ல முடியாது என்பதால் அதிபரிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டி உள்ளதாகவும் இது அதிபரின் பாதுகாப்புப் பணிகளைச் சிரமமானதாக மாற்றுவதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
எல்லா இடங்களிலும் சம்பவம்: இந்த சம்பவம் வெள்ளை மாளிகையில் மட்டும் நடக்கவில்லை. வில்மிங்டன் மற்றும் ரெஹோபோத் பீச், டெலாவேர், கேம்ப் டேவிட் மற்றும் மசாசூசெட்ஸின் நன்டக்கெட் என அமெரிக்க அதிபர் செல்லும் எல்லா இடங்களிலும் நடந்துள்ளது. அதிபரின் நாய் ஆக்ரோஷமாக இருப்பதாகவும் இதனால் வரும் காலத்தில் யாருக்காவது மோசமான சம்பவம் நடக்கலாம் என்று கடந்த 2022ஆம் ஆண்டிலேயே சீக்ரெட் சர்வீஸ் அதிகாரி எச்சரித்துள்ளார். அவர் சொன்னது போலவே நாய்க் கடி சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளது.
கமான்டர் பைடனை கடந்த 2021 டிசம்பர் மாதம் குட்டியாக அதிபரின் குடும்பத்தினர் தத்து எடுத்தனர். முதல் ஓராண்டு இது அமைதியாகவே இருந்துள்ளது. அதன் பின்னர் 2022 டிசம்பர் மாதம் முதலே அந்த நாய் பலரையும் கடிக்க ஆரம்பித்துவிட்டதாம். அதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்பதே பிரச்சினை.
நடவடிக்கை: இதையடுத்து நாயைக் கட்டுக்குள் கொண்டு வர முதலில் பைடன் குடும்பத்தினர் முயன்றுள்ளனர். இருப்பினும் முடியாமல் போகவே கடைசியாக அந்த நாயை வெள்ளை மாளிகையில் இருந்து அப்புறப்படுத்திவிட்டனர். இப்போது அந்த நாய் எங்கு இருக்கிறது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.
சர்ச்சை: இதற்கிடையே சவுத் டகோட்டா கவர்னரும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான கிறிஸ்டி நோம் இது தொடர்பாகக் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது இந்த கிறிஸ்டி நோம் புதிதாகப் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது 15 மாத நாயை ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால் கொன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.. மேலும், பைடனும் அதேயே செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஜோ பைடனின் நாய் 24 சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளைத் தாக்கியுள்ளது. அந்த நாயை என்ன செய்யலாம் என்று முடிவெடுக்க இன்னும் எத்தனை பேரைத் தாக்க வேண்டும் எனத் தெரியவில்லை. இதேபோல ஆக்ரோஷமாக இருந்ததால் நான் எனது நாயைக் கொன்றேன். ஒரு வேலை நான் வெள்ளை மாளிகை சென்றால் கமாண்டருக்கும் (பைடனின் நாய்) அதே நிலை தான்" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியிலும் அவர் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தான் பகிர்ந்து கொண்டார். நாயின் செயல்பாடுகளுக்கு ஓனர் தான் பொறுப்பு என்றும் ஆக்ரோஷமாகச் செயல்பட்டால் சுற்றி இருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நாயின் ஓனருக்கே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பதிலடி: இதற்கிடையே கிறிஸ்டியின் கருத்துக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜீன்-பியர், "கிறிஸ்டியின் கருத்துகள் மோசமானது.. அபத்தமானது.. அமெரிக்கா நாய்களை நேசிக்கும் நாடு.. அப்படி இருக்கும் போது நாய்களைக் கொல்வது பற்றி இப்படிச் சொல்வது சரியானது இல்லை. இதன் மூலம் அவரது அரசியல் வாழ்க்கைக்கான முடிவுரையை அவரே எழுத ஆரம்பித்துள்ளார்" என்றார். இந்த கிறிஸ்டி டிரம்ப் உடன் சேர்ந்து குடியரசு கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராகக் களமிறங்கலாம் என்று சொல்லப்படுகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications