சீன தொழிலதிபருடன் கைகோர்த்த எலான் மஸ்க்.. ஸ்பேஸ்எக்ஸின் புதிய சாதனை.. இதுவரை இப்படி நடந்ததே இல்லை
வாஷிங்டன்: விண்வெளி துறையில் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைத்து வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இப்போது புதிய மைல்கல்லைத் தொட்டுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பூமியின் துருவப் பகுதிகளுக்கு மேலே உள்ள விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளது. இது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முக்கிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
இப்போது விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி துறையில் தொடர்ச்சியாகச் சாதனை படைத்து வருகிறது. விண்வெளி துறையில் ஸ்பேஸ்எக்ஸ் சாதனைகள் தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்து வருகிறது.

ஸ்பேஸ்எக்ஸ்
இதற்கிடையே ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மற்றொரு மைல்கல்லாகப் பூமியின் துருவப் பகுதிகளுக்கு மேலே உள்ள விண்வெளி பகுதிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளது. உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 9.46 மணிக்கு புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் குழுவினர் விண்ணுக்கு ஏவப்பட்டனர். அவர்கள் டிராகன் காப்ஸ்யூலில் இந்த பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
இந்த திட்டத்திற்கு "ஃப்ராம்2" பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 19ம் நூற்றாண்டில் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பயணங்களுக்காகக் கட்டப்பட்ட புகழ்பெற்ற நார்வே கப்பலின் நினைவாக இந்த பெயரை வைத்துள்ளனர். விண்வெளியில் முதல் எக்ஸ்ரே எடுப்பது, காளான்களை வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை இதில் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களைக் குடியேற வைக்க வேண்டும் என்பதே ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் திட்டமாக இருக்கும் சூழலில், அதற்கான முதல் படியாக இது இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
விண்வெளிக்குச் சென்றது யார்
சீனாவில் பிறந்த வாங் என்பவர் இந்த திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். தேவையான நிதியுதவிகளையும் அவரே வழங்கியுள்ள நிலையில், தன்னுடன் வரும் மற்ற குழுவினரையும் அவரே தேர்ந்தெடுத்தார். அதன்படி இந்த குழுவில் நார்வே திரைப்பட இயக்குநர் ஜானிக்கே மிக்கேல்சன், ஜெர்மனியைச் சேர்ந்த ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சியாளர் ரபியா ரோஜ்; ஆஸ்திரேலியா ஆய்வாளர் எரிக் பிலிப்ஸ் உடன் செல்கிறார்கள்.
இந்த விண்வெளி பயணத்திற்காக இந்த குழு கடந்த பல மாதங்களாகவே தீவிரமாகப் பயிற்சி செய்துள்ளனர். கிட்டதட்ட விண்வெளிக்கு இணையான சூழல் நிலவும் அலாஸ்காவில் சுமார் எட்டு மாதங்கள் இந்த குழு தீவிர பயிற்சி பெற்றுள்ளது. அதன் பின்னரே இன்று விண்வெளிக்கு இவர்கள் சென்றுள்ளனர். மொத்தம் 4 நாட்கள் இந்த பயணம் இருக்கும் எனத் தெரிகிறது.
ஆய்வுகள்
விண்வெளியில் மட்டுமின்றி பூமிக்குத் திரும்பிய பிறகும் சில ஆய்வுகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதாவது பூமிக்குத் திரும்பிய பிறகு கூடுதல் மருத்துவ உதவி இல்லாமல் விண்கலத்திலிருந்து வெளியேற முயல்வார்கள். விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு விண்வெளி வீரர்களால் பூமியில் குறிப்பிட்ட பணிகளை எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியும் என்பதைக் கண்டறிய இந்த ஆய்வுகளை நடத்துகிறார்கள்.
இதுவரை இப்படி நடந்ததே இல்லை
பொதுவாகப் பூமியின் துருவங்கள் என்பது விண்வெளி பயணங்களில் தவிர்க்கப்படும் ஒன்றாகவே இருக்கிறது. அமெரிக்காவின் அப்பல்லோ நிலவு ராக்கெட்டை தவிர்த்து எந்தவொரு விண்கலனும் துருவ பகுதிக்கு மேல் பறந்ததே இல்லை. அப்பல்லோ கூட பூமியின் துருவங்களுக்கு மேலே நேரடியாகப் பறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஸ்பேஎஸ்எக்ஸ் நிறுவனத்தின் இந்த விண்வெளி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications