ட்விஸ்ட்.. 5 கோடீஸ்வரர்களுடன் சென்ற டைட்டன் நீர்மூழ்கி விபத்து தெரிந்தே நடந்ததா? புதிய ஷாக்கிங் தகவல்
வாஷிங்டன்: விபத்துக்குள்ளான டைட்டானிக் நீர்மூழ்கி கப்பலை காண்பதற்காக பெரும் கோடீஸ்வரர்கள் 5 பேருடன் சென்ற டைட்டன் நீர்மூழ்கி கலம் கடந்த மாதம் 23 ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் நெருங்கிவிட்ட நிலையில், தற்போது புதிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1912 ஆம் ஆண்டு பனிப்பாறையில் சிக்கி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் அமெரிக்காவின் நியூ ஃபெளண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் கிடந்ததை 1985 ஆம் ஆண்டு கண்டறிந்தனர். இதையடுத்து, இந்த கப்பலை கடல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் அவ்வப்போது ஆழ்கடலுக்கு சென்று ஆய்வு செய்து வந்து கொண்டிருந்தனர்.

இந்த உடைந்த டைட்டானிக் கப்பலை சுற்றுலாப்பயணிகளும் நீர்மூழ்கி கப்பலில் சென்று பார்க்கும் வகையிலான வசதியை ‛தி ஓசன் கேட்' என்ற நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. அந்த வகையில், தான் கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் ‛டைட்டன்' என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கி கப்பல் 5 கோடீஸ்வரர்களுடன் பயணத்தை தொடங்கியது.
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க ‛டைட்டன்' நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டன் தொழிலதிபர்களான ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), ஷாஜதா தாவூத் (48) அவரது மகன் சுலைமான் (19), பிரஞ்ச் ஆய்வாளர் பால் ஹென்றாி நர்கோலெட் (77) உள்பட 5 பேர் சென்றனர். இந்த நீர்மூழ்கி கப்பல் தனது பயணத்தை தொடங்கிய 2 மணி நேரத்தில் தொடர்பை இழந்தது. அவசர காலத்தில் தப்பிப்பதற்காக 96 மணி நேரம் மட்டுமே தாக்கு பிடிக்கும் அளவுக்கு ஆக்சிஜன் அந்த நீர்மூழ்கி கலத்தில் இருந்தது.
இதனால், முழு வீச்சில் தேடுதல் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நீர் மூழ்கி கப்பலின் அழுத்த அறை வெடித்து சிதறியுள்ளது. நீர் மூழ்கி கப்பலின் சேதம் அடைந்த பாகங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து, சில நாட்களாக மீட்பு பணிகள் நடந்தன. சோனார் கருவி மற்றும் புது டெக்னாலஜியுடன் தயாரிக்கப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் கருவிகள் மூலம் நீர்மூழ்கி கப்பலை தேடும் பணி தீவிரமாக நடந்தது.
இந்த மீட்பு பணியின் 5வது நாளில் நீர்மூழ்கி கப்பல் கடலுக்குள் அழுத்தம் தாங்காமல் வெடித்து சிதறியதும், அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்ததும் தெரியவந்தது. உலக அளவில் இந்த டைட்டன் நீர் மூழ்கி வெடித்து சிதறியது தலைப்பு செய்திகள் ஆகின. டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளாகி ஒரு மாதங்கள் நெருங்கிவிட்ட நிலையில், தற்போது டைட்டன் நீர்மூழ்கி கப்பலை உருவாக்கிய நிறுவனமான ஓசேன் கேட்டின் சிஇஒ ஸ்டக்டன் ரஷின் நெருங்கிய நண்பரான கரல் ஸ்டேன்லி திடுக்கிட வைக்கும் புதிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
ஆஸ்திரெலியாவின் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த கர்ல் ஸ்டேன்லி இது தொடர்பாக கூறுகையில், " டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை காண ஆழ்கடலுக்கு செல்லும் இந்த பயணம் பேரழிவில் தான் முடியும் என்று ஸ்டாக்டன் ரஷிற்கு நன்கு தெரியும். ஆனாலும் கோடீஸ்வரர்களை சிக்க வைப்பதற்கான எலிப்பொறி போல இதை தொடர்ந்து உருவாக்கினார்.
கார்பன் ஃபைபர் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டீயுப் கண்டிப்பாக தோல்வி அடையும் என்று எனக்கு முன்பே தெரியும். சோதனைக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு நாங்கள் சென்ற போதே இதை என்னால் உணர முடிந்தது. இது குறித்து நான் அவருக்கு தொடர்ச்சியாக எனது கவலைகளை கூறி வந்தேன். ஆனாலும் தனது உயிரையும் உடன் சென்றவர்களின் உயிரையும் பணயம் வைத்து தனது முயற்சியை ஸ்டக்டன் ரஷ் தொடர்ந்தார்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications