கார் ஓட்ட கூடாது.. ஜன்னலை திறக்கக்கூடாது! அமெரிக்க அதிபருக்கு விதிக்கப்படும் வினோத கட்டுப்பாடுகள்!
வாஷிங்டன்: உலகின் மிகவும் வலிமையான தலைவர் என்றால் அது நிச்சயம் அமெரிக்க அதிபர் தான்.. இருப்பினும், என்ன தான் அமெரிக்க அதிபராக இருந்தாலும் கூட விரும்பிய அனைத்தையும் செய்ய முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். அது குறித்து நாம் பார்க்கலாம்.
உலகின் மிகவும் வலிமையான நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்கிறார். இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு அவர் அதிபராகப் பதவியேற்கிறார்.

என்ன தான், அமெரிக்க அதிபராக இருந்தாலும் கூட டிரம்ப் நினைத்தாலும் கூட சில விஷயங்களை அவரால் செய்யவே முடியாது. சாதாரண மனிதர்கள் செய்யும் இந்த விஷயங்களைச் செய்யக்கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கார் ஓட்ட முடியாது:
முதலில் அமெரிக்க அதிபர் பதவியில் இருப்போர் நிச்சயம் கார் ஓட்டவே கூடாது. பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 1960களில் அதிபரைக் குறிவைத்து கொலை முயற்சிகள் நடந்த நிலையில், வாரன் கமிஷன் ரிப்போர்ட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 1963- 1969 வரை அதிபராக இருந்த லிண்டன் பி. ஜான்சன் தான் கடைசியாகச் சொந்தமாகக் காரை ஓட்டிய அதிபர் ஆவார். அதன் பிறகு எந்தவொரு அதிபருக்கும் கார் ஓட்ட அனுமதி இல்லை.
விஷயம் என்னவென்றால் அதிபராக இருக்கும் நபர் மட்டுமின்றி மாஜி அதிபர்களும் கார் ஓட்ட கூடாது. அதேநேரம் சில நேரங்களில் சொந்த காரை இயக்க மட்டும் அனுமதி அளிக்கப்படும். அதுவும் கூட முன்கூட்டியே எங்குச் செல்கிறார்.. எந்த ரூட்டில் செல்கிறார் என்பது குறித்த தகவல்களை சீக்ரெட் சர்வீஸ் உடன் பகிர வேண்டும்.
செல்போன்:
அதேபோல அதிபர்கள் செல்போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை வைத்திருக்கவும் கட்டுப்பாடுகள் உள்ளன. ஒபாமாவுக்கு முன்பு அதிபராக இருந்த யாரும் தனிப்பட்ட செல்போன்களை வைத்திருக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் ஒபாமா தனக்கென தனிப்பட்ட சாதனம் தேவை என்று விரும்பி கேட்டார். இதையடுத்து அவருக்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ஐபேட் வழங்கப்பட்டது. இதில் வழக்கமான ஐபேட்களை காட்டிலும் பல பாதுகாப்பு அம்சங்கள் இருந்தன. இது ஒபாமாபேட் என்றும் கூட அழைக்கப்படும்.
அவருக்குப் பின் அதிபராக இருந்த போது அவர் தொடர்ச்சியாகத் தனது தனிப்பட்ட செல்போன்களை யூஸ் செய்து வந்தார். பலரும் அது செக்யூரிட்டி ரிஸ்க் என எச்சரித்த பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். பைடன் காலத்தில் அவருக்காக மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஆப்பிள் வாட்ச் தயாரிக்கப்பட்டது. அதைத்தான் பைடன் பயன்படுத்தினார். இப்போது டிரம்ப் அதிபராகும் நிலையில், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
பள்ளி நிகழ்வுகள்:
மேலும், அதிபரின் குழந்தை அல்லது பேரக்குழந்தைகள் பள்ளி நிகழ்வில் பங்கேற்பது கடினம். பள்ளியைச் சுற்றிலும் மிகக் கடுமையான செக்யூரிட்டி போட வேண்டும். கலை நிகழ்ச்சிகள் சமயத்தில் பலரும் உள்ளே வருவார்கள் செல்வார்கள். இதுபோன்ற நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வது கடினம் என்பதால் இதற்கும் அனுமதி கிடைப்பது வாய்ப்பு குறைவு.
சமூக வலைத்தள கட்டுப்பாடுகள்:
சமீபத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் இதுவும் ஒன்று. அதாவது அதிபராகப் பதவியேற்கும் நபர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தக் கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும், அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து யாரையும் பிளாக் செய்ய முடியாது. அது பேச்சுரிமைக்கு எதிரானது என்பதால் சமூக வலைத்தளத்தில் யாரையும் பிளாக் செய்ய முடியாது. அதேநேரம் தனிப்பட்ட கணக்கில் இருந்து பிளாக் செய்யலாம்
அதாவது டிரம்பை நாம் எடுத்துக் கொள்வோம். அவருக்கு அமெரிக்காவின் 47ஆவது அதிபர் என்று தனியாக ஒரு சமூக வலைத்தள பக்கம் இருக்கும். அதில் இருந்து யாரையும் அவரால் பிளாக் செய்ய முடியாது. அதேநேரம் டொனாலாட் டிரம்பின் தனிப்பட்ட பக்கத்தில் இருந்து (அவர் அதிபராகும் முன்பே பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருவது) யாரை வேண்டுமானாலும் பிளாக் செய்யலாம்.
விமான பயணம்:
மேலும், ஒரு அமெரிக்க அதிபரால் சாதாரண விமானத்தில் டிக்கெட் எடுத்துச் செல்ல முடியாது. பாதுகாப்பு காரணங்களால் இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபருக்காகப் பிரத்தியேகமாக மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட "ஏர் ஃபோர்ஸ் ஒன்" என்ற ராணுவ விமானத்தை மட்டுமே அதிபரால் பயன்படுத்த முடியும்.
ஜன்னலைத் திறக்கக்கூடாது
மற்றொரு வினோதமான கட்டுப்பாடு என்னவென்றால்.. அதிபராக உள்ள ஒருவர் ஜன்னலைத் திறக்கக் கூடாது. கொலை முயற்சிக்கு வாய்ப்பு இருப்பதால் கட்டிடம், கார் என எங்கும் அதிபர் ஜன்னலை திறக்கக்கூடாது. மாஜி அமெரிக்க அதிபர் ஒபாமா இது தொடர்பாக முன்பு ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications