ஒரே ஒரு ட்வீட்.. எலான் மஸ்க்கிற்கு ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி போச்சு.. காரணம் இந்த டிரம்ப் தான்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையே மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இந்த மோதலால் எலான் மஸ்கிற்கே அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14% சரிந்துள்ள நிலையில், இதனால் டெஸ்லா பங்கு மதிப்பு 150 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.13 லட்சம் கோடி நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை சிறந்த நண்பர்களாக இருந்த டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே இப்போது மோதல் வெடித்துள்ளது. இருவரும் மாறி மாறி வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார்கள். அமெரிக்காவில் இருவருக்கும் இடையேயான இந்த மோதல் தான் இப்போது பரபரப்பாக மாறியுள்ளது.

டெஸ்லா பங்குகள்
இதற்கிடையே டிரம்ப் உடனான மோதல் காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14% வரை சரிந்துள்ளது. இதனால் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 150 பில்லியன் டாலருக்கும் மேல் குறைந்தது. கடந்த ஐந்து நாட்களில் டெஸ்லா பங்குகள் நான்கு நாட்கள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.13 லட்சம் கோடி
டிரம்ப் உடன் நேற்று மோதல் உச்சமடைந்த நிலையில், டெஸ்லா சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் கீழ் சென்றுள்ளது. இப்போது டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 916 பில்லியன் டாலராக உள்ளது. டெஸ்லா வரலாற்றில் ஒரே நாளில் அதன் மதிப்பு இந்தளவுக்குச் சரிந்ததே இல்லை. அந்தளவுக்கு மோசமான சரிவை இப்போது சந்தித்துள்ளது. ஒரே நாளில் டெஸ்லாவின் பங்கு மதிப்பு 150 பில்லியன் சரிந்துள்ளது. அதாவது இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.13 லட்சம் கோடியாகும்.
அமெரிக்க அரசின் நாசா மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு இடையேயான அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்யப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்தே பங்குகள் மிக மோசமாகச் சரிய ஆரம்பித்தது. டிரம்ப் கொண்டு வந்த பிக் பியூடிப்புல் பில் என்ற மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்தால் அதற்குப் பதிலடியாக டிரம்ப் இப்படிக் கூறினார். மஸ்குடன் பேச்சுவார்த்தை நடத்துவது கடினமாகிவிட்டதாகவும், அவர் அதிகமாக எதிர்வினை புரிவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
டிரம்ப் விமர்சனம்
அதிபர் தேர்தலில் வென்று டிரம்ப் ஆட்சியைப் பிடித்த சமயத்தில் டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் மஸ்கிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. அவர் அரசு செலவுகளைக் குறைக்க டாஜ் துறையை வழிநடத்தினார். அவர் கடந்த வாரம் தான் இந்த டாஜ் துறையில் இருந்து விலகிய நிலையில், இப்போது இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதற்கிடையே எலான் மஸ்க்கை நான் தான் அரசில் இருந்து விலகச் சொன்னதாக டிரம்ப் கூறியிருக்கிறார்.
ஆவேசமான டிரம்ப்
இதுகுறித்து ட்ரம்ப் தனது சமூக ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "எலான் மிகவும் பலவீனமாக இருந்தார். அவரை வெளியேறும்படி நான்தான் கேட்டுக் கொண்டேன். அவரது எலெக்ட்ரிக் கார்கள் மீது யாருக்கும் விருப்பம் இல்லை. ஆனாலும் எலெக்ட்ரிக் கார்களை வாங்கக் கட்டாயப்படுத்திய ஆணையை நான் ரத்து செய்தேன். நான் இதைச் செய்வேன் என்பது அவருக்கே தெரியும். ஆனாலும், இதனால் கோபம் கொண்டே அவர் பைத்தியம் போல் நடந்துகொள்கிறார்!" என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார்.
இந்த மோதல் டெஸ்லா நிறுவனத்தின் பங்குச் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தலைவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்த முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குறைத்துள்ளது.












Click it and Unblock the Notifications