பாலஸ்தீனம்-இஸ்ரேல் போரை நிறுத்தியது யார்? டிரம்ப் சொல்லும் புது கணக்கு!
வாஷிங்டன்: பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே 450 நாட்களுக்கும் மேல் நீடித்து வந்த போர் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இன்று அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப், போர் நிறுத்தத்திற்கு நான்தான் காரணம் என்று உரிமை கோருகிறார். ஆனால் மற்றொரு தரப்பு பைடனை கை காட்டுகிறது.
42 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பும் கைதிகளை திரும்ப ஒப்படைக்கிறது. 2025க்கு முன்னதாக போர் நிறுத்தப்படும் என்று பைடன் கூறியிருந்ததை போலவே தற்போது போர் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு டிரம்ப் மற்றும் பைடன் என இரு தரப்பும் இதற்கு உரிமை கோரியுள்ளது. உண்மையில் போரை நிறுத்தியது யார்?

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென தாக்குதலை நடத்தியது. பொறுத்து பொறுத்து பார்த்தவன் ஒருநாள் வெடிப்பான், என்பதை போல இந்த தாக்குதல் இருந்தது. இது போருக்கான தொடக்க புள்ளி. பதிலடி நடத்துகிறோம் என இஸ்ரேல் சுமார் 450 நாட்கள் போரை நடத்தியது.
போர் நிறுத்தம்:
போருக்கு எதிராக சர்வதேச நாடுகள் பல குரல் கொடுத்தன. குறிப்பாக சீனாவும், ரஷ்யாவும் ஐநா சபையிலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் போர் நிறுத்தம் குறித்த தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆனால் அப்படி செய்தபோதெல்லாம், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தள்ளுபடி செய்தது. இருப்பினும் ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இஸ்ரேல் அதை கண்டுக்கொள்ளவில்லை.
மறுபுறம் சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சர்வதேச நீதிமன்றத்தை ஏற்காத நாடுகளை தவிர மற்ற நாடுகளுக்கு சென்றால் அவரை கைது செய்ய அந்த நாடுகள் தயாராக இருந்தன. மறுபுறம் அமெரிக்காவிலேயே மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்களை பெரிய அளவில் முன்னெடுத்திருந்தனர்.
அமெரிக்க தேர்தலும் போர் நிறுத்தமும்:
இதெல்லாம் வெளியில் தெரிந்த அழுத்தங்கள். ஆனால், வெளியில் தெரியாமல் ஜோபைடனுக்கு ஒரு அழுத்தம் இருந்தது. அதாவது போர் பைடன் பெயரையும், அவர் சார்ந்துள்ள ஜனநாயக கட்சியின் பெயரையும் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாக்கிவிட்டது. இதெல்லாம் நடந்துக்கொண்டிருந்தபோதே, அமெரிக்க அதிபர் தேர்தலும் வந்தது.
இந்த தேர்தலில் வெற்றி பெற போர் நிறுத்தம் வேண்டும் என்பதை பைடன் உணர்ந்தார். எனவே, "2025ம் ஆண்டுக்குள் போர் நிறுத்தம் செய்யப்படும்" என்று அவர் கூறியிருந்தார். அதற்காக அவர் சில முயற்சிகளை மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த முயற்சிகள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதனை பைடனே ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார்.
அதாவது, "நெத்தன்யாகு நான் சொல்வதை பொருட்படுத்தாமல் நடந்து கொண்டார். Carpet Bomb போடக்கூடாது என்று நான் கூறியதற்கு, பெர்லின் மற்றும் ஹிரோஷிமாவில் அமெரிக்கா இந்த குண்டை போடவில்லையா? என்று என்னையே திரும்பி கேட்டார்" என பைடன் கூறியிருந்தார். பைடனின் போர் நிறுத்த முயற்சி பலிக்கவில்லை என்பதற்கு இதுவே பெரிய உதாரணம்.
டிரம்ப் மேற்கொண்ட போர் நிறுத்த முயற்சி:
அதிபர் தேர்தலில் டிரம்ப்-க்கு பெரிதும் கை கொடுத்தது அவர் மேற்கொண்ட போர் நிறுத்த முயற்சிதான். நெதன்யாகுவிடம் பேச டிரம்ப் தேர்ந்தெடுத்த ஆள்தான் 'ஸ்டீவ் விட்காஃப்'. இவர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ராஜதந்திர ஆள் கிடையாது. ஆனால், நெதன்யாகுவை எப்படி பேசி வழிக்கு வர வைக்க வேண்டும் என்பதை இவர் தெரிந்து வைத்திருந்தார். டிரம்பின் கடந்த கால ஆட்சியில் இவர் வெளியுறவுத்துறையில் முக்கிய நபராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் மேற்கொண்ட முயற்சிகள்தான் போர் நிறுத்தத்திற்கு காரணம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்த பைடனால் செய்ய முடியாததை, தனி ஒருவனாக நான் செய்து முடித்திருக்கிறேன் என்று டிரம்ப் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications