நம்பியவர்கள் தேவைப்படும் போது ஆதரவாக இல்லை.. வளர்ந்த நாடுகள் மீது பாய்ந்த பிரதமர் மோடி
வாஷிங்டன்: நாங்கள் நம்பியவர்கள் தேவைப்படும் போது எங்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்று வளர்ந்த நாடுகள் மீது பிரதமர் மோடி விமர்சனத்தை முன்வைத்தார். பப்புவா நியூ கினியவில் நடைபெற்ற இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 3ஆவது உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானில் நடந்து ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அங்கிருந்து நேரடியாக பப்புவா நியூ கினியா நாட்டிற்குச் சென்றார். அங்கே பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 3ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா சென்றார்.

இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறியதாவது:- எரிவாயு, உரம் மற்றும் மருந்துகள் வினியாக சங்கிலியில் தற்போது இடையூறு ஏற்பட்டுள்ளதை நாம் பார்த்து வருகிறோம். நாம் யாரை நம்பினோமோ அவர்கள் நமக்கு தேவைப்படும் போது ஆதரவாக நிற்கவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கிளோபல் சவுத் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பருவ நிலை மாற்றம் இயற்கை பேரிடர்கள், பட்டினி, வறுமை மற்றும் சுகாதாரம் ஆகியவை தொடர்பான சவால்கள் ஏற்கனவே அங்கு இருந்தன. தற்போது புதிய பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. கடினமான காலத்தில் இந்தியா உறுதுணையாக நின்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மராபேவும் சர்வதேச அளவில் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து பாராட்டி பேசினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "உலகளாவிய அதிகார போட்டியில் நாங்கள் பாதிக்கப்பட்டோம். கிளோபல் சவுத்திற்கு நீங்கள் (பிரதமர் மோடி) ஒரு தலைவராக உள்ளீர்கள். சர்வதேச மன்றங்களில் உங்களின் தலைமைத்துவத்திற்கு பின்னால் நாங்கள் இருப்போம்" என்றார்.
முன்னதாக ஜி 7 நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு பிரதமர் மோடி நேற்று பப்புவா நியூ கினியா நாட்டுக்கு புறப்பட்டுச்சென்றார். தலைநகர் மோர்ஸ்பிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுவாக பப்புவா நியூ கினியாவில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நாட்டிற்கு வரும் எந்தத் தலைவருக்கும் அரசு தரப்பில் இருந்து வரவேற்பு அளிக்கப்படாது.
ஆனால், பிரதமர் மோடிக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப் நேரடியாக விமான நிலையம் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். அது மட்டும் இன்றி பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து ஜேம்ஸ் மராப் வணங்கினார். பிரதமர் மோடியைக் கட்டித்தழுவி வரவேற்ற ஜேம்ஸ் மராப், திடீரென மோடியின் காலை தொட்டு வணங்கினார். இது சர்வதேச அளவிலும் கவனம் பெற்றது.












Click it and Unblock the Notifications