திடீரென டிரம்பிற்கு எதிராக திரண்ட மக்கள்! தலைநகர் வாஷிங்டனில் குவிந்த பல ஆயிரம் பேர்! பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக நாளைய தினம் டிரம்ப் பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அங்குத் தீவிரமாக நடைபெற்றது. இது ஒரு பக்கம் இருக்க டிரம்பிற்கு எதிராகப் போராட அங்குப் பல ஆயிரம் பேர் திரண்டுள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராகத் தேர்வானார். அதிபர் தேர்தலில் வென்றாலும் அந்நாட்டின் சட்டப்படி உடனடியாக அதிபராகப் பதவியேற்க முடியாது.

டிரம்ப் பதவியேற்பு விழா:
ஜனவரி 20ம் தேதி, அதாவது நாளைய தினம் தான் அவர் அமெரிக்காவின் 47ஆவது அதிபராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசி நகரில் செய்யப்பட்டுள்ளது. முதலில் பதவியேற்பு விழா திறந்த வெளி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு அங்கு கடும் குளிர் நிலவி வந்ததால், பதவியேற்பு விழா உள்ளரங்கிற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மக்கள் போராட்டம்:
இது ஒரு பக்கம் இருக்க டிரம்ப் பதவியேற்பிற்கு எதிராக அங்கு மிகப் பெரிய போராட்டம் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே டொனால்ட் டிரம்ப் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல ஆயிரம் மக்கள் வாஷிங்டனின் தெருக்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்கள் போராட்டம் என்ற பெயரில் நடைபெறும் இந்த அணிவகுப்பில் பல அமைப்புகளும் பங்கேற்றுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு டிரம்ப் முதலில் பதவியேற்ற போது பெண்கள் இதேபோல பெரியளவில் திரண்ட போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்கேற்பது யார்:
அமெரிக்காவைப் பொறுத்தவரைக் கருக்கலைப்பு விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. டிரம்ப் ஆட்சியில் கருக்கலைப்பிற்கு முழுமையாகத் தடை விதிக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. இது அந்நாட்டுப் பெண்கள் தங்களின் உரிமை பறிக்கப்படுவதாகப் பார்க்கிறார்கள். அதேபோல துப்பாக்கி விவகாரத்திலும் அங்கு டிரம்ப் ஆட்சியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரிக்கும் சூழலில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால், டிரம்ப் அரசு அதற்கு நேர்மாறாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் எனத் தெரிகிறது.
இது தவிரக் காலநிலை மாற்றம், புலம்பெயர்ந்தோர் உரிமைகள் என டிரம்ப் கொள்கைக்கு எதிராக இருக்கும் பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள். டிரம்ப் நாளைய தினம் அதிபராகப் பதவியேற்கும் சூழலில், அடுத்து வரும் நாட்களிலும் போராட்டம் தொடரும் என்றே தெரிகிறது. டிரம்ப் பதவியேற்பு விழாவுக்குப் பாதிப்பு வராத வரை போராட்டத்திற்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.
நிர்வாக உத்தரவுகள்:
டிரம்ப் நாளை அதிபராகப் பதவியேற்கும் சூழலில் முதல் நாளே அவர் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்க உள்ளார். அதிலும் குறிப்பாகப் புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் டிரம்ப் தீவிரம் காட்டுவார் என்றே தெரிகிறது. ஏனென்றால் பிரச்சாரத்தின் போதே சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்புடம் எனத் தொடர்ந்து கூறி வந்தார். எனவே, இந்த முறை ஆரம்பத்திலேயே அதற்கு எதிரான நடவடிக்கைகளில் டிரம்ப் தீவிரம் காட்டுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications