துரத்தும் "துரதிர்ஷ்டம்.." மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண அழைத்து சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்
வாஷிங்டன்: டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகிக் கிடப்பதைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல் இப்போது திடீரென மாயமாகியுள்ளது.
Recommended Video
மனிதர்கள் நீண்ட தூரம், ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்குச் சென்று வணிகம் செய்ய முதலில் பயன்படுத்தியது என்னவோ கப்பல்களைத் தான். விலை குறைவு தொடங்கிப் பல காரணங்களால் இன்றும் உலக வணிகத்தைக் கப்பல்களே தீர்மானம் செய்கிறது.
நாம் கப்பல்களில் பயணிக்க ஆரம்பித்ததில் இருந்து இதுவரை பல ஆயிரம் கப்பல்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி மூழ்கியுள்ளன. ஆனால், பலருக்கும் கப்பல் என்றாலே முதலில் டைட்டானிக் கப்பலே நினைவுக்கு வரும்.

டைட்டானிக்: குறிப்பாக ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் படத்தை எடுத்த பிறகு, அது டைட்டானிக் புகழை அப்படியே வைத்திருக்க உதவியது.. அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிச் சிதிலமடைந்து கிடக்கும் பகுதியில் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது தான் அது அங்கே இருந்த பனிப்பாறைகளில் மோதி விபத்தில் சிக்கியதைக் கண்டுபிடித்தனர்.
ஆய்வுப் பணிகள் ஒரு பக்கம் நடக்கும் அதேநேரத்தில் நீருக்கு அடியே இருக்கும் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காணச் சுற்றுலாப் பயணிகள் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வந்தனர். நேற்றைய தினம் இந்தக் கப்பல் வழக்கம் போலக் கிளம்பிய நிலையில், அது மாயமானதாகக் கூறப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல் கிளம்பிய 30 நிமிடத்தில் கன்ட்டிரோல் ஸ்டேஷன் உடனான இணைப்பு துண்டிக்கப்பட்டாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாயமான நீர்மூழ்கிக் கப்பல்: இதையடுத்து நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நீர்மூழ்கிக் கப்பலில் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருக்கிறது. இதனால் சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தை சுற்றித் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நீர் மூழ்கிக் கப்பல் மொத்தம் 5 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களின் உயிருக்கு என்ன ஆனது என்பது குறித்தும் தெரியவில்லை.
டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தின் போது கடந்த 1912 ஏப்ரல் 15ஆம் தேதி பனிப்பாறைகளில் மோதி கடலில் மூழ்கியது. அந்த மோசமான விபத்தில் சுமார் 1500 பயணிகள் உயிரிழந்தனர். டைட்டானிக் மூழ்கிய இடம் கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. டைட்டானிக் சிதிலமடைந்த பகுதிகள் அட்லாண்டிக் கடலில் 3,800 மீட்டர் ஆழத்தில் இருக்கிறது.

ஆய்வாளர்கள்: 1985 ஆம் ஆண்டில் அந்த மூழ்கிய இடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். பல ஆண்டுகள் ஆனாலும் அங்கே கப்பலின் பகுதிகள் இருந்தன. அதைத் தொடர்ந்து கப்பலில் விபத்து எப்படி நிகழ்ந்தது, அது பனிப்பாறைகளில் மோதி மூழ்கியது எப்படி என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. பல விரிவான ஆய்வுகளுக்குப் பின்னரே கப்பல் எப்படி மூழ்கியிருக்கலாம் என்பதைக் கண்டறிந்தனர். கடந்த மே மாதம் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் தொடர்பான முழு 3டி படம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டைட்டானிக் கப்பல் மூழ்கி 110 ஆண்டுகளைத் தாண்டிவிட்ட நிலையில், இன்னும் அதன் துரதிஷ்டம் தொடர்கிறது. நீரில் மூழ்கிக் கிடக்கும் அதன் இடிபாடுகளைப் பார்க்கச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியுள்ளது. உள்ளே இருந்தவர்களுக்கு சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருக்கும் நிலையில், விரைவாக நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications