“கெடு” முடியுது.. கனடாவுக்கு இன்று “லாஸ்ட் சான்ஸ்” - இந்தியாவை விட்டே வெளியேறும் தூதர்கள்
வாஷிங்டன்: காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையை தொடர்ந்து இந்தியா - கனடா இடையே மோதல் வெடித்து உள்ள நிலையில், கனடாவின் தூதரக அதிகாரிகள் வெளியேற இந்தியா விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது.
இந்திய அரசால் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான காலிஸ்தான் டைகர் போர்சின் தலைவரும் கனடா நாட்டை சேர்ந்தவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொலை செய்யப்பட்டார். இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் கொல்லப்பட்ட நிஜ்ஜார் உள்ளார். இவரது மரணம் தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகளே பூதாகரமாக வெடித்தன.

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் தலையீடு உள்ளதாக அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கனடா அரசு இந்திய தூதரை வெளியேற உத்தரவிட்டதும், அதற்கு பதிலடியாக இந்திய அரசு கனடா தூதரை வெளியேற உத்தரவிட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே நிஜ்ஜரை கொலை குறித்த உளவு தகவல்களை கனடாவிற்கு அமெரிக்காவே வழங்கியது என்றும், ஆனால் இந்தியாவை இந்த கொலையில் தொடர்புபடுத்தும் தகவலை வெளியிட தடை விதித்ததாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சனையை தொடர்ந்து இந்தியாவும், கனடாவும் விசா நடைமுறைகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்து உள்ளன. இரு நாடுகளின் நட்பு நாடுகளும் சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், பிரச்சனை பெரிதாகிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் கனடாவில் உள்ள காலிஸ்தான் செயல்பாட்டாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா வேகம் காட்டி வருகிறது. குறிப்பாக காலிஸ்தான் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவின் சொத்துக்களை என்.ஐ.ஏ. முடக்கி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பன்னுவின் ஏராளமான சொத்துக்கள் என்.ஐ.ஏவால் கைப்பற்றப்பட்டு உள்ளன.

அதேபோன்று காலிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பலரையும் இந்தியா கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தேடப்பட்டு வரும் 19 காலிஸ்தான் தீவிரவாதிகளை கனடா, பிரிட்டன், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருப்பதை இந்தியா கண்டுபிடித்து உள்ளது. இந்த 19 பேரின் சொத்துக்களும் முடக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள கனடா நாட்டின் 41 தூதர்களை திரும்பப் பெற அக்டோபர் 10 ஆம் தேதியான இன்று வரை இந்திய அரசு கெடு விதித்தது.
அந்த கெடு இன்று முடிவடையும் நிலையில், கனடா அரசு இந்தியாவில் இருந்த தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை இந்தியாவிற்கு வெளியில் இருந்து செயல்படுமாறு கூறி மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications