மொத்தம் 4 குட் நியூஸ்.. எந்தெந்த கொரோனா தடுப்பூசிக்கு எவ்வளவு நோய் தடுப்பு சக்தி தெரியுமா? எது டாப்?
வாஷிங்டன்: கொரோனா நோய்க்கான தடுப்பூசி மருந்து ஆய்வில், அடுத்தடுத்து நல்ல செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
இதுவரை உலகம் முழுவதிலும், 4 மருந்து நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது கட்ட ஆய்வின் முதற்கட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
இந்த நான்கு ஆய்வுகளின் முடிவுகளிலும் 90 சதவீதத்திற்கும் மேல் மருந்து சிறப்பாக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது, மனித குலத்துக்கு கிடைத்துள்ள மகத்தான செய்தி ஆகும்.
அமெரிக்கா பெரிதும் நம்பிய மாடர்னா கொரோனா வேக்சின்.. 94.5% தடுப்பாற்றால் கொண்டது.. ரிசல்ட் வெளியானது
அமெரிக்கா, சீனா
மூன்றாவது கட்ட ஆய்வின் முதல்கட்ட அறிக்கையை முதலில் வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைசர் பயோடெக் நிறுவனம். இதன் தடுப்புமருந்து 90% பயனளிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதுமே அடுத்த சில நாட்களில் சீன நாட்டின் குளோபல் டைம்ஸ் நாளிதழில் தங்கள் நாட்டில் தயாராக கூடிய கொரோனா தடுப்பு மருந்து 90 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தது.
ரஷ்யா அறிவிப்பு
அவ்வளவுதான் அடுத்த சில நாட்களில் மற்றும் ஒரு நல்ல செய்தி ரஷ்யாவில் இருந்து வந்தது. ரஷ்ய நாட்டின் ஸ்பூட்னிக் V தடுப்பூசி 92% சிறப்பாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஸ்பூட்னிக் V கொரோனா நோய் தடுப்பு மருந்தை இந்தியாவை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
ஹைதராபாத்தில் ரஷ்ய தடுப்பூசிகள்
முதல்கட்ட மருந்துகள் ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்திற்கு வந்தது. அது பற்றிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி நிலையில், இதுவரை வந்ததிலேயே மிக அதிகமான வெற்றி சதவீதத்தைக் கொண்டுள்ளது அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி.
அபாரம்
மாடர்னா தடுப்பூசி 94.5 சதவீதம் அளவுக்கு செயல் திறன் கொண்டது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்ட பரிசோதனையில், அமெரிக்காவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்டு இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது.
நல்ல செய்திகள்
பொதுவாக ஒரு தடுப்பு மருந்து 50 விழுக்காடு அல்லது 70 விழுக்காட்டுக்கும் மேல் வெற்றி பெற்றாலே அது பெரிய விஷயம். கொரோனா நோய் தடுப்பூசி 90 சதவீதத்துக்கும் மேல் வெற்றி சதவீதத்தை வைத்துள்ளது என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. உண்மையிலேயே உலகம் முழுக்க இதே போன்ற செயல் திறனுடன் இந்த தடுப்பு மருந்துகள் வேலை செய்யுமானால், கொரோனா இல்லாத உலகத்தை படைக்க முடியும் என்பது மட்டும் நிச்சயம் என்கிறார்கள் உலக விஞ்ஞானிகள்.