ரத்த கண்ணீர் வடிக்கும் இந்திய நிறுவனங்கள்! டிரம்ப் அடாவடியால் தாறுமாறாக எகிறிய ஹெச்-1பி விசா செலவுகள்
வாஷிங்டன்: ஹெச்-1பி விசா கட்டணங்களை டிரம்ப் உயர்த்தியுள்ளது இந்தியாவையே அதிகம் பாதிக்கும். குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்களே இதில் அதிகம் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தியாவை எப்படி பாதிக்கும்.. இந்த பாதிப்பை சமாளிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹெச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை திடீரென 4,500 டாலரில் (ரூ.3.7 லட்சம்) இருந்து 100,000 டாலராக (ரூ.88.28 லட்சம்) உயர்த்தி உத்தரவிட்டார். அதாவது ஹெச்-1பி விசா கட்டணம் 2,122% அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த பல ஆண்டுகளில் ஹெச்-1பி விசாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

கட்டணம் உயர்வு
நேற்று காலை இது தொடர்பான அறிவிப்பு வெளியானது. முதலில் ஹெச்-1பி விசா வைத்திருப்போர் அனைவரும் ஆண்டுதோறும் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது போல தகவல் பரவவே பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதன் பிறகே புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என விளக்கம் தரப்பட்டது. இது நிம்மதி தான் என்றாலும் இந்த உத்தரவும் கூட இந்தியாவை நேரடியாக பாதிக்கிறது.
அமெரிக்காவின் இந்த கொள்கை மாற்றம் இந்தியாவில் பெரியளவில் இருக்கும் என்றே கூறப்படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்ச ஹெச்-1பி விசாவை பெறும் நாடாக இந்தியா இருக்கிறது. கடந்த அக்டோபர் 2022 மற்றும் செப்டம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து ஹெச்-1பி விசாக்களில் 72.3% இந்தியாவுக்கே ஒதுக்கப்பட்டது.
இந்தியாவுக்கே பாதிப்பு
இந்தச் சூழலில் தான் இப்போது திடீரென விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய ஐடி வல்லுநர்கள் அமெரிக்கா செல்லும் முறையையே மாற்றி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்கலான இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் தான் ஹெச்-1பி விசாவை அதிகம் பயன்படுத்தி வந்தன. கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட 1.3 லட்சம் ஹெச்-1பி விசாக்களில் 20%ஐ இந்த நிறுவனங்களே பெற்றன.
இந்த கூடுதல் கட்டணத்தால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் டாலர்கள் கூடுதல் செலவாகும் ஏனென்றால் முன்பு 1,000 ஹெச்-1பி விசாக்களை பெறும் ஒரு நிறுவனம், 4.5 மில்லியன் டாலர் மட்டுமே செலவு செய்ய வேண்டி இருந்தது. ஆனால், இப்போது 100 மில்லியன் டாலர் செலவழிக்க வேண்டி இருக்கிறது.
இந்திய நிறுவனங்கள்
இந்த உத்தரவு இந்தியப் பொருளாதாரத்திலும் நிச்சயம் எதிரொலிக்கும். ஏனென்றால் பல இந்திய ஐடி நிறுவனங்கள் ஹெச்-1பி விசாக்களை நம்பியே தங்கள் வளர்ச்சியை அமைத்திருந்தனர். பல ஐடி நிறுவனங்களுக்கு அமெரிக்காவிலேயே அதிக கஸ்டமர்கள் இருந்தனர். இதனால் அமெரிக்காவுக்கு அதிக ஊழியர்களை அனுப்ப வேண்டி இருந்தது. ஆனால், இப்போது இந்த ஒருதலைப்பட்ச கொள்கையால் ஐடி நிறுவனங்கள், தங்கள் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
அதேநேரம் இந்த நிலையை நாம் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். முதலில் இந்தியா தனது உள்நாட்டுத் தொழில்நுட்ப நெட்வோர்க்கை வேகமாக வளர்க்க வேண்டும். நமது நாட்டிலேயே உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கி, ஐடி துறையின் ஹப்பாக இந்தியாவை உருவாக்க வேண்டும். சர்வதேச நிறுவனங்களுக்கு நமது ஊழியர்களை அனுப்பாமல், நாமே தலைசிறந்த நிறுவனங்களை உருவாக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு மத்திய அரசு ஊக்க தொகையை வழங்கும் நிலையில், அதை விரிவுபடுத்துவதன் மூலம் இதை சாதிக்க முடியும்.
அடுத்து அமெரிக்காவை தாண்டி வேறு சர்வதேச மார்கெட்களை நாம் தேட வேண்டும். ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளுடன் தொழில்நுட்ப ஒப்பந்தங்களை போடுவதன் மூலம் இதையும் நம்மால் செய்ய முடியும். மற்றொரு பக்கம் அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விசா, வரி விஷயங்களில் தீர்வை எட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இப்படி ஒருசேர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இதன் பாதிப்புகளை நாம் குறைக்க முடியும்.
அமெரிக்காவுக்கும் சிக்கல் தான்
இந்தியா மட்டுமின்றி, இது அமெரிக்காவுக்கும் கூட ஒரு வகையில் பின்னடவையே தரும். ஏனென்றால் இப்போது ஏஐ துறை படுவேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் உலகெங்கும் ஏஐ துறையில் திறமையான ஊழியர்களை சேர்க்கவே போட்டி போட்டு வருகின்றன. அப்படியிருக்கும்போது அமெரிக்காவுக்கு வெளிநாட்டினர் வருவதையே தடுக்கும் வகையில் டிரம்ப் அரசு போட்டுள்ள இந்த உத்தரவு அமெரிக்காவுக்கே பின்னடைவை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications