எரியும் நெருப்பில் எண்ணெய்! காலநிலை மாற்றத்திற்கு வித்திடும் அமெரிக்கா.. டிரம்ப் அதிரடி
வாஷிங்டன்: காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு வளர்ந்த நாடுகள் அனைத்தும் மின்சார வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஆனால், அமெரிக அதிபராக பதவியேற்ற டிரம்ப், இனி மின்சார வாகனங்கள் மட்டுதான் என்கிற அறிவிப்புக்கு தடை விதிப்பதாகவும், மக்கள் எந்த வாகனங்களை விரும்பினாலும் அதை பயன்படுத்தலாம் எனவும் கூறியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற சூழலியல் மாநாட்டில் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டிருந்தது. தற்போது இந்த ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக அமெரிக்கா வெளியே வர உள்ளது. இதன் அறிகுறியாகதான் டிரம்ப்பின் பேச்சு இருக்கிறது.

கரியமில வாயு வெளியேற்றமும் அமெரிக்காவும்:
வளர்ந்த நாடுகள் என்கிற பட்டியல் ஒன்று உண்டு. அதில் அமெரிக்கா முதல் இடத்திலும், ஐரோப்பிய நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் இருக்கின்றன. இந்த நாடுகளிடம் பணம் கொட்டி கிடக்கிறது. எனவே, இந்த நாடுகள் இனி பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயுகளை பயன்படுத்தாமல் மின்சார வாகனத்தை பயன்படுத்தி கரியமில வாயு வெளியுற்றத்தை குறைக்க வேண்டும் என்று PARIS COP 21 மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 192 நாடுகள் கையெழுத்திட்டன. அமெரிக்காவும் கையெழுத்து போட்டது.
இப்படி செய்வதன் மூலம் அதிகரித்து வரும் உலக வெப்ப நிலையை கட்டுப்படுத்த முடியும். கடந்த 2023ம் ஆண்டு பிரிட்டனில் ஏற்பட்ட கடும் வெயில், 2024ல் பாகிஸ்தான் வெள்ளம், சென்னை போன்ற நகரங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் இந்த வெப்ப நிலை உயர்வால்தான் ஏற்படுகிறது. எனவேதான் இந்த மாநாட்டில் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐரோப்பிய நாடுகள் vs அமெரிக்கா:
இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, என்னெ முயற்சிகள் மேற்கொண்டு வெப்ப நிலையை கட்டுப்படுத்தின என்கிற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் தற்போது மின்சார கார்கள் வந்துவிட்டன. காற்றாலை, சூரிய மின்சகத்தி மற்றும் அணு உலை போன்றவற்றின் மூலம் உருவாக்கப்படும் மின்சாரங்கள் இந்த வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதாவது டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில், "இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்கா செலவுதான் மிச்சம். சீனாவும், இந்தியாவும் மட்டும் இயற்கை எரிபொருளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் அனுமதியில்லை என்று கொந்தளித்தார். மட்டுமல்லாது இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியே வருவதாக அறிவித்தார்.
பைடன் vs டிரம்ப்
ஆனால் அவரது பதவிக்காலம் முடிந்த பின்னர் பைடன் புதிய அதிபராக பதவியேற்ற போது, மீண்டும் பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைவதாக அறிவித்தார். இப்படி இருக்கையில் மீண்டும் அதிபராக பதவி ஏற்றுள்ள டிரம்ப், இனி அமெரிக்காவில் மின்சார வாகனங்கள் மட்டும் என்கிற பேச்சுக்கு இடமில்லை. மக்கள் எந்த வாகனங்களை விரும்புகிறார்களோ அதையே பயன்படுத்தலாம் என்று தனது அதிபர் உரையில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பெட்ரோலிய வளங்களை குறிப்பிட்ட அவர், ஆட்டோமொபைல் துறை நலிவடைந்து வருவதாகவும், எனவே வளர்ச்சிக்கு நாங்கள் இயற்கை எரிபொருளுக்கு மீண்டும் மாறுகிறோம் என்றும் கூறியுள்ளார். டிரம்ப்பின் நடவடிக்கைகள், உலக வெப்பமயமாதலை மேலும் தீவிரப்படுத்தும். இதன் மூலம் இந்தியா போன்ற வளரும் நாடுகள் கடுமையாக பாதிப்படையும் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications